எங்களை வெளியேற்றியதற்கு கருணாநிதி காரணமல்ல: பாமக

கூட்டணி உறவு முறிந்ததாக திமுக அறிவித்ததைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து ஆராயவும், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கவும் இன்று பாட்டாளி மக்களஅ கட்சியின் பொதுக்குழு சென்னையில் கூடியது.
தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடந்த இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமை வகித்தார். கட்சியின் நிறுவனர் டாக்டக் ராமதாஸ், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி, மத்திய அமைச்சர் வேலு, எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்டத் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வரவேற்கிறோம்:
இதில் பேசிய ராமதாஸ், கூட்டணியில் இருந்து எங்களை வெளியேற்றிய திமுகவின் முடிவு எங்களுக்கு வருத்தம் தந்தாலும் அதனால் நாங்கள் ஆச்சரியமோ அல்லது அதிர்ச்சியோ அடையவில்லை என்றார்.
பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்,
எங்களை வெளியேற்ற வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டு அதை இப்போது நேரம் பார்த்து செயல்படுத்தியிருக்கிறார்கள். இது திட்டமிட்ட செயல். ஆனால், வெளியேற்றியதற்கான காரணங்களாக திமுக தரப்பு கூறிய கருத்துக்கள் கடும் கண்டனத்துக்குரியவை.
எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு தெரிவித்து மலிவான அரசியலில் பாமக ஈடுபட்டுள்ளதாக திமுக கூறியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். நாங்கள் மக்கள் பிரச்சனைகளைத் தான் எழுப்பினோம், மாநில வளர்ச்சிக்கான கருத்துக்களைத் தான் தெரிவித்தோம் என்று கூறப்பட்டுள்ளது.
வருத்தம் தெரிவித்தால் மீண்டும் கூட்டணியில் சேரலாம் என்ற முதல்வர் கருணாநிதியின் கருத்து குறித்து தீர்மானத்தில் ஏதும் கூறப்படவில்லை. அந்த விஷயத்தில் பாமக அமைதி காட்டியுள்ளது.
முன்னதாக கூட்டத்தில் பேசிய ஜி.கே. மணி,
கட்சியின் பெரும்பாலான மாவட்ட நிர்வாகிகள் கூட்டணியை விட்டு பாமக வெளியேற்றப்பட்டதை வரவேற்றுள்ளனர். பெரும்பாலான கட்சியினரும் கூட நீண்ட காலத்துக்கு முன்பே நாம் வெளியே வந்திருக்க வேண்டும் என்றே கருதுகின்றனர்.
ஒரு செத்துப் போன காரணத்தைச் சொல்லி கூட்டணியை விட்டு நீக்கியுள்ளனர். டாக்டர் ராமதாசி்ன் உத்தரவை ஏற்று முதல்வர் கருணாநிதியுடன் குருவை சந்திக்க வைக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன். கருணாநிதியிடம் மன்னிப்பு கேட்கக் கூட குரு தயாராக இருந்தார். ஆனால், திடீரென இந்த முடிவை எடுத்துவிட்டனர்.
ஆனால், திமுக இந்த முடிவை எடுக்க கருணாநிதியோ, அமைச்சர் ஸ்டாலினோ அல்லது அவர்களது குடும்பத்தில் யாருமோ காரணமில்லை என்றார் மணி சஸ்பென்ஸ் வைத்து.
அவருக்கு முன்பாக பேசிய நிர்வாகிகள், பாமகவை திமுக நீக்கியதற்கு அமைச்சர் ஆற்காடு வீராசாமியும், விழுப்புரம் மாவட்டத்தில் பாமகவுடன் எப்போதும் மோதி வரும் அமைச்சர் பொன்முடியும் தான் காரணம் என குற்றம் சாட்டினர்.
கருணாநிதி காரணமல்ல என்று மணி பேசியது கூட, இந்த இரு அமைச்சர்களையும் மறைமுகமாக சுட்டிக் காட்டித் தான் என்று தெரிகிறது.
இன்றைய கூட்டத்தில் பாமக நிறைவேற்றிய இன்னொரு தீர்மானத்தில், அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு முழு ஆதரவு தருவதாகக் கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் மத்திய அரசில் தொடர்வதற்கான ஆர்வத்தை பாமக தெளிவாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications