தண்ணீர் இருந்தால் நீங்கள் தான் அடுத்த கோடீஸ்வரன்.. உலக நாடுகள் சண்டை போட ரெடியானது!
ஒரு காலத்தில் எண்ணெய் இருந்த இடத்தில் இன்று தண்ணீர் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. உலகின் மொத்த நன்னீரில் அதாவது மனிதர்கள் குடிக்க கூடிய தண்ணீர் வெறும் 4 சதவீதம் மட்டுமே இந்தியாவிடம் இருக்கிறது. ஆனால் உலக மக்கள் தொகையில் சுமார் 18 சதவீதம் பேர் இந்தியாவில் வசிக்கின்றனர்.
இந்தியாவில் மட்டுமல்ல உலகில் பல நாடுகள் தண்ணீர் பிரச்சனை மிகப்பெரியதாக வெடிக்கும் அவல நிலை உருவாகி வருகிறது. இதற்கிடையில் கால நிலை மாற்றமும் நடந்து வருகிறது. வெனிசுலா, ஈரான் மீது அமெரிக்கா கச்சா எண்ணெய்க்காக போர் தொடுத்ததோ, அடுத்த 10-15 வருடத்தில் குடிநீர்-க்காக பெரும் போர் வெடிக்கலாம்.

இந்த நிலையில் உலகம் முழுவதிலும், ஏன் இந்தியாவிலும் தண்ணீர் நிர்வாகம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த 'வாட்டர்டெக்' (WaterTech) துறை அடுத்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டாடா, ரிலையன்ஸ் உள்ளிட்ட பெரும் கார்ப்ரேட் நிறுவனங்களும் இந்தத் துறையில் முதலீட்டை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
தண்ணீர் சார்ந்த எதிர்கால வர்த்தக சந்தை நான்கு முக்கிய பிரிவுகளை மையமாகக் கொண்டு வளரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி தற்போது கிளீன் எனர்ஜி மிகப்பெரிய முதலீட்டு சந்தையாகவும், வர்த்தக சந்தையாகவும் மாறியுள்ளதோ, இதேபோல் அடித்த சில ஆண்டுகளில் வார்டர் டெக் மிகப்பெரிய வர்த்தகமாக மாறும்.
இப்படி மாறினால் தண்ணீர் அளவீடு, தண்ணீர் மறுசுழற்சி, திறன் மேம்பாடு மற்றும் புதிய நீர் ஆதாரங்கள் ஆகியவை தான் WaterTech துறையின் வேல்யூ செயினாக இருக்கும். முதலீட்டு சந்தையில் சரியான துறையை கண்டறிவது தான் முக்கியம், அப்படி பார்க்கையில் கிளீன் எனர்ஜி, ஏஐ வரிசையில் வாட்டர் டெக் வரலாம்.
ஸ்மார்ட் வாட்டர் மீட்டர்கள்
தண்ணீர் பற்றாக்குறை அதிகரிக்கும் போது, வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஒரே கட்டண முறைக்கு பதிலாக பயன்பாட்டிற்கு ஏற்ப படிப்படியாக அதிகரிக்கும் கட்டண முறை அமல்படுத்தப்படலாம்.
அப்போது கசிவுகளை உடனடியாக கண்டறியும் தொழில்நுட்பங்கள் மற்றும் இணைய வசதியுடன் இயங்கும் ஸ்மார்ட் வாட்டர் மீட்டர்களின் தேவை அதிகரிக்கும். மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் இந்த முயற்சிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஸ்மார்ட் நகரங்களுக்கு டாடா மற்றும் ஜியோ போன்ற நிறுவனங்கள் இண்டர்நெட் அடிப்படையிலான நீர் கண்காணிப்பு தீர்வுகளை வழங்கி வருகின்றன.
வாட்டர் ஆஸ் எ சர்வீஸ்
மின்சாரத்தை தனியார் சோலார் நிறுவனங்களிடம் இருந்து வாங்குவது போல, எதிர்காலத்தில் தொழிற்சாலைகள் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரையும் தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கும் சூழல் உருவாகலாம்.
இதற்காக தொழிற்துறை பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்து, கழிவுநீரை மறுசுழற்சி செய்து மீண்டும் தொழிற்சாலைகளுக்கு வழங்கும் முறை உலகின் பல நாடுகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. 15 முதல் 20 ஆண்டுகள் வரை நீடிக்கும் ஒப்பந்தங்களின் மூலம் இந்த சேவை வழங்கப்படுகிறது. இதுவும் இந்தியாவில் மிகப்பெரிய வர்த்தகமாக மாறலாம்.
விவசாயத்தில் சொட்டு நீர்ப்பாசனம்
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதற்கான சொட்டு நீர்ப்பாசன முறைக்கு மத்திய அரசு 'ஒரு சொட்டு நீர், அதிக மகசூல்' திட்டத்தின் கீழ் மானியமும் வழங்கி வருகிறது.
இதனால் சொட்டு நீர்ப்பாசன உபகரணங்கள் தயாரித்தல், பராமரிப்பு ஒப்பந்தங்கள், விவசாயிகளுக்கு நிதி வசதி மற்றும் மானிய உதவிகளை ஏற்படுத்தி தரும் சேவைகள் ஆகியவை அடுத்த சில ஆண்டுகளில் வேகமாக வளரக்கூடிய துறைகளாக பார்க்கப்படுகின்றன.
கடல் நீரையே குடிநீராக்கும் தொழில்நுட்பம்
இஸ்ரேல் போன்ற நாடுகள் கடல் நீரை சுத்திகரித்து குடிநீர் மற்றும் தொழில் பயன்பாட்டிற்கு மாற்றும் தொழில்நுட்பத்தில் உலகளவில் முன்னணியில் உள்ளன.
அதே மாதிரியான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சென்னை அருகே கடல் நீரை சுத்திகரிக்கும் திட்டங்களும் செயல்பாட்டில் உள்ளன. தற்போது அதிக செலவு காரணமாக தொழில்துறை பயன்பாட்டில் மட்டுமே அதிகமாக பயன்படுத்தப்பட்டாலும், தொழில்நுட்ப வளர்ச்சியால் எதிர்காலத்தில் இது பொதுமக்களுக்கும் விரிவடைய வாய்ப்புள்ளது.
எதிர்கால முதலீட்டு சந்தையாக மாறும் தண்ணீர்
அமெரிக்காவில் ஏற்கனவே தண்ணீர் உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட பியூச்சர்ஸ் வர்த்தகம் தொடங்கியுள்ளது. இந்தியாவில் இது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்றாலும், தண்ணீர் மேலாண்மை மற்றும் வாட்டர்டெக் துறை மிகப்பெரிய முதலீட்டு வாய்ப்பாக உருவெடுத்து வருகிறது.
மக்கள் தொகை உயர்வு, நகரமயமாக்கல், தொழில்துறை வளர்ச்சி மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை இந்தியாவில் தண்ணீரின் மதிப்பை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.
அதனால் தான் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூட தற்போது வாட்டர்டெக் துறையில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. எதிர்காலத்தில் எண்ணெயைப் போலவே தண்ணீரும் முக்கிய பொருளாதார வளமாக மாறும் என்ற எதிர்பார்ப்பு வலுப்பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications