ஓமனிலிருந்து 37,340 டன் யூரியா தூத்துக்குடி வந்தது
தூத்துக்குடி: தமிழகத்தில் நிலவும் உரத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க தமிழக அரசு 37,340 டன் யூரியாவை ஓமனிலிருந்து இறக்குமதி செய்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் உரத்தட்டுப்பாடு நிலவுகிறது. தமிழகத்தில் இந்த நிலை ஏற்பட்டு விடாமல் தடுக்க, தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஏற்கனவே சீன நாட்டில் இருந்து 26 ஆயிரத்து 231 மெட்ரிக் டன் டிஏபி உரம் வந்தது. 30 மாவட்டங்களுக்கும் இவை பிரித்து அனுப்பப்பட்டு வருகிறது.
குறுவை சாகுபடி ஆரம்பித்துள்ளதால் தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு அதிக உரம் அனுப்பப்பட்டு வருகிறது. நெல்லைக்கு ஆயிரத்து 250 டன்னும், தூத்துக்குடிக்கு 600 டன்னும், குமரிக்கு 150 டன்னும், ஒதுக்கப்பட்டுள்ளது.
உரங்கள் அனுப்பும் பணி வேகமாக நடந்து வருகிறது. இதுவரை 10 ஆயிரம் டன் உரங்கள் வெளிமாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த உரங்கள் முழுவதும் தனியார் உர நிறுவனங்களுக்கு மட்டுமே சப்ளை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் ஓமன் நாட்டில் இருந்து இப்கோ யூரியா 25 ஆயிரத்து 732 டன் தூத்துக்குடிக்கு வந்தது. இது தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு விநியோகம் செய்ய அனுப்பப்பட்டு வருகிறது. 10 ஆயிரம் டன் வரை அனுப்பப்பட்டு விட்டது.
இதுதவிர ஓமன் நாட்டில் இருந்து பெரிய சைஸ் யூரியா உரமான கிரிப்கோ உரம் 37 ஆயிரத்து 340 டன் ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி துறைமுகத்திற்கு கப்பல் வந்துள்ளது.
இந்த கப்பலில் இருந்து இன்று முதல் நான்கு நாட்களுக்கு உரங்கள் இறக்கப்பட்டு குடோனுக்கு கொண்டு செல்லப்படும். அதன்பிறகு அங்கிருந்து பேக்கிங் செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் அனுப்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications