வைரமுத்துவின் கல்யாண மண்டபத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: சென்னை டிரஸ்ட்புரத்தில் உள்ள கவிஞர் வைரமுத்துவுக்குச் சொந்தமான கல்யாண மண்டபத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கவிஞர் வைரமுத்துவுக்குச் சொந்தமான பொன்மணி மாளிகை, கோடம்பாக்கம், டிரஸ்ட்புரம், சிவன் கோவில் 6வது குறுக்குத் தெருவில் உள்ளது.
திருவல்லிக்கேணியை சேர்ந்த சத்தியநாராயணா - லஷ்மி தம்பதியினரின் இல்லத் திருமண விழா இன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. காலை 9.50 மணியளவில் திருமண மண்டபத்திற்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.
போனை, எலக்ட்ரீஷியன் முருகேசன் எடுத்து பேசியுள்ளார். அவரிடம் போனில் பேசிய நபர், திருமண மண்டபத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் குண்டு வெடிக்கும் எனவும் கூறியுள்ளார்.
இதனால் பதட்டமடைந்த எலக்ட்ரீஷியன் முருகேசன் திருமண மண்டப மேலாளர் ரவிக்குமாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக கோடம்பாக்கம் போலீசில் வெடிகுண்டு மிரட்டல் குறித்து ரவிக்குமார் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் வஜ்ரவேலு, சப் இன்ஸ்பெக்டர் சேது பாண்டியன் ஆகியோர் தலைமையிலான போலீஸ் படை மோப்ப நாய் சகிதம் திருமண மண்டபத்துக்கு வந்தனர்.
திருமண மண்டபம், இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம், உணவுக் கூடம், மொட்டை மாடி ஆகிய அனைத்து இடங்களிலும் போலீசார் சோதனை நடத்தினர்.
திருமணம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே இந்த சோதனை நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால் அது வெறும் புரளி எனத் தெரிய வந்தது.
மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications