இலங்கை கடற்படை மீண்டும் வெறித்தனம் - ராமேஸ்வரம் மீனவர் காயம்
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை மீண்டும் ஒரு வெறித்தன தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் ராமேஸ்வரம் மீனவர் படுகாயமடைந்தார்.
தமிழக மீனவர்கள் மீது அவ்வப்போது குருவிகளைச் சுடுவது போல கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்துவது இலங்கை கடற்படையின் பொழுதுபோக்காகி விட்டது. இதனால் வருடந்தோறும் சில மீனவர்கள் உயிரிழந்து வரும் கொடுமை தொடர்கதையாகி விட்டது.
சமீபத்தில்தான் சந்தியாகு என்ற ராமேஸ்வரம் மீனவர் இலங்கை கடற்படையின் வெறித் தாக்குதலுக்குப் பலியானார். இந்த நிலையில் நேற்று மீண்டும் ஒரு வெறித் தாக்குதலை நடத்தியுள்ளது இலங்கை கடற்படை.
நேற்று காலை ராமேஸ்வரத்திலிருந்து 750க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க விசைப் படகுகளில் சென்றனர். இந்த நிலையில் காலை பத்தரை மணியளவில் திடீரென இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர்.
தமிழக மீனவர்களை சுற்றி வளைத்த அவர்கள், மென்டோன் என்பவரின் படகை நிறுத்தினர். அந்தப் படகில் பாண்டி, சந்திரன், மென்டோனின் சகோதரர் ஆன்ட்ரன், கண்ணுச்சாமி ஆகியோர் இருந்தனர். பின்னர் அந்தப் படகை நோக்கி சரமாரியாக சுட்டனர்.
இதில் ஆன்ட்ரன் கண், கன்னம், கை, கால்களில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த நிலையில் விழுந்தார் ஆன்ட்ரன். பாண்டிக்கும் லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் இலங்கை படையினர் சென்று விட்டனர்.
அதன் பின்னர் தமிழக மீனவர்கள் வேகமாக கரைக்குத் திரும்பினர். துப்பாக்கிச் சூடு தகவலை செல்போன் மூலம் கரையில் உள்ள மீனவர்களுக்கு தெரிவிக்கவே அனைத்து மீனவர்களும் ராமேஸ்வரம் கரையில் திரண்டு விட்டனர். பெரும் பீதியும், பதட்டமும் ஏற்பட்டது.
காயமடைந்த ஆன்ட்ரன் ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இலங்கை கடற்படையின் இந்த வெறித்தாக்குதலைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர்.












Click it and Unblock the Notifications