காடுவெட்டி குருவை கைது செய்யும் திட்டம் இல்லை: டிஜிபி

இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஜெயின் பேசுகையில், சமீப காலமாக பத்திரிகைகளில் பல செய்திகள் தவறாக வருகின்றன. எனவே பத்திரிகையாளர்களை அடிக்கடி சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்.
எந்த ஒரு செய்தியாக இருந்தாலும் போலீசாரிடம் விளக்கம் கேட்டு செய்திகளை போடுவது நல்லது. கும்மிடிப்பூண்டியில் அண்மையில் செயல் இழந்த வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டனர். இது பற்றி நடத்திய விசாரணையில் பழைய இரும்பு கழிவுகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ததில் அவை கலந்து வந்துவிட்டது தெரியவந்துள்ளது.
வெளிநாடுகளில் அவை ராணுவத்தால் தேவையற்றவை என்று கைவிடப்பட்டவையாகும். இவற்றை பாதிப்பு எதுவும் இல்லாமல் எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து உள்ளூர் போலீசாரைக் கொண்டு தொழிற்சாலைகளுக்கு விழிப்புணர்வு அளித்து வருகிறோம். தூத்துக்குடியிலும் இதுபோன்று பழைய இரும்பு கழிவுகளுடன் கலந்து வந்த வெடிகுண்டுகள் கைப்பற்றப் பட்டன. இதற்கும் தீவிரவாதி களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.
முன்னாள் எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு மீது வாரண்ட் எதுவும் நிலுவையில் இல்லை. இதுவரை அவர் மீது வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படவும் இல்லை. அவரது பேச்சு தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கமோ அல்லது எந்த ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியோ, அவருக்கு எதிராக இதுவரை புகார் செய்யவில்லை.
பாமகவினர் மீது வழக்குப்போட்டு அவர்களை கைது செய்யும் எண்ணம் எதுவும் காவல்துறைக்கு இல்லை.
திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்துக் கொள்ளப் போவதாக போலீசார் வதந்தி பரப்பவில்லை.
பொதுவாக சிவில் வழக்குகளில் போலீசார் தலையிடுவதில்லை, இதேபோல கட்டப்பஞ்சாயத்திலும் அவர்கள் ஈடுபடுவதில்லை. ஒருசில சிவில் வழக்குகளில் சட்டத்துக்கு உட்பட்டு கிரிமினல் வழக்குகளையும் போலீசார் பதிவு செய்ய வேண்டி உள்ளது. அதில் நடவடிக்கை எடுப்பதற்காக போலீசார் இந்த வழக்குகளில் சில நேரங்களில் தலையிட வேண்டியிருக்கிறது.
இருப்பினும் சிவில் வழக்குகளில் தலையிடுவதோ, கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவதோ கூடாது என்று போலீசாருக்கு எச்சரிக்கை செய்துள்ளோம்.
தேனி மாவட்டத்தில் போலீசார் எடுத்த கடும் நடவடிக்கை காரணமாக நக்சலைட்டுகளின் ஊடுருவல் ஒடுக்கப்பட்டு விட்டது என்றார்.
உடன் இருந்த கூடுதல்டிஜிபி விஜயக்குமார் தர்மபுரி கள்ளச்சாராய சாவுகள் குறித்துக் கூறுகையில், கள்ளச்சாராய சாவு தொடர்பாக பச்சையப்பன் என்ற சாராய வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளச் சாராயத்தை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கள்ளச்சாராய மாதிரி சேகரிக்கப் பட்டு பரிசோதனைக்கு அனுப்பப் பட்டுள்ளது. தமிழக எல்லையோர பகுதிகளில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.
கர்நாடகத்தில் நடந்த கள்ளச்சாராய சாவுகளுக்கும், தமிழகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தமிழகத்தில் இதுவரை 55 ஆயிரம் சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 51 ஆயிரம் பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இதில் 282 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றார் விஜயகுமார்.












Click it and Unblock the Notifications