கச்சத்தீவை குத்தகை அடிப்படையில் மீட்க கருணாநிதி கோரிக்கை
சென்னை: இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை அடிக்கடி தாக்குவதிலிருந்து மீனவர்களைக் காக்க, கச்சத்தீவை குத்தகை அடிப்படையில் மீட்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
தமிழக மீனவர்கள் குறிப்பாக தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய- இலங்கை கடல் பகுதியில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து தங்கள் பிழைப்பை நடத்தி வந்தது காலம் காலமாய் நடந்த சரித்திர உண்மை.
கடந்த 26-6-1974 அன்று இந்திய அரசும், இலங்கை அரசும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. இரு நாடுளுக்கும் ஆடம்ஸ் பாலத்துக்கும் பாக் ஜலசந்திக்கும் இடையே எல்லை வரையறை செய்வது தொடர்பாக இந்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் 5, 6-வது ஷரத்தின்படி இந்திய மீனவர்கள் கச்சத்தீவு கடற் பகுதியில் மீன் பிடிக்க உரிமை உள்ளது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது. 6-வது பிரிவு இந்திய, இலங்கை படகுகள் இரு நாட்டு கடல் பகுதிகளிலும் மீன் பிடித்துக் கொள்ளலாம்.
23-3-1976-ம் ஆண்டில் மன்னார் வளைகுடா பகுதியில் இரு நாட்டு எல்லை வரையறை தொடர்பாக 2-வது ஒப்பந்தம் ஏற்பட்டது.
இந்த ஒப்பந்தம் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தில் இல்லாத பகுதிகளில் எல்லை வரையறை செய்வதற்கு மட்டும்தான். 1974-ம் ஆண்டு ஒப்பந்தத்தில் உள்ள மற்ற அம்சங்கள் அனைத்தும் அப்படியே உள்ளன. அவை ரத்து ஆகாமல் செல்லுபடியாகும் வகையில் உள்ளது.
ஆனாலும் 1976-ம் ஆண்டு இந்திய எல்லைக்கு உள்ளேயே மீன் பிடித்துக் கொள்ளுமாறு இந்திய அரசு ஆலோசனை கூறப்பட்டது. இந்திய மீனவர்கள் கச்சத்தீவில் தங்கள் மீன்பிடி வலைகளை காய வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது. கச்சத் தீவு பகுதியில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்த உத்தரவுகள் நிர்வாக ரீதியான உத்தரவுகள்தான். 1974 அல்லது 1976-ம் ஆண்டு ஒப்பந்தத்தில் உள்ளவை அல்ல. எனவே இந்த உத்தரவுகளால் அதிகாரபூர்வமான இரு நாட்டு ஒப்பந்தம் ரத்து ஆகி விடாது.
இந்த உத்தரவுகளால் நமது மீனவர்கள் சொல்ல முடியாத அளவுக்கு துன்பங்களுக்கு உள்ளானார்கள். கச்சத்தீவு பகுதியில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமை மறுக்கப்பட்டது.
நமது மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். தாக்கப்பட்டனர். கடற்படை யினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த அசம்பாவிதங்கள் தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சட்டசபையிலும் இது எதிரொலித்தது.
தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து அடுத்தடுத்து வந்த முதல்-அமைச்சர்கள் மத்திய அரசுக்கு கடிதங்கள் எழுதினார்கள்.
அடுத்து எனது அரசு ஆட்சிக்கு வந்த பிறகு 17-8-2006 அன்று நமது தலைமை செயலாளர் வெளியுறவுத்துறை செயலாள ருக்கு ஒரு கடிதம் எழுதி னார். தமிழக அரசின் சார் பில் மத்திய அரசுக்கு இந்த விவகாரத்தில் தலையிடுமாறு வற்புறுத்தியதுடன் கீழ்க்கண்ட யோசனை களையும் தெரிவித்து இருந்தார்.
கச்சத்தீவையும் அதை சுற்றி உள்ள கடல் பகுதியையும் நிரந்தரமாக குத்தகை அடிப்படையில் மீட்க வேண்டும். அங்கு தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கவும், வலைகளை காயப் போடவும் அனுமதிக்க வேண்டும்.
இலங்கை கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் 5 கடல் மைல் தொலைவில் மீன் பிடிக்க அதிகாரபூர்வமாக அனுமதி வழங்க வேண்டும்.
இரு நாட்டு கடல் பகுதியில் தவித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்களை இரு நாட்டு தரப்பினரும் துன்புறுத்தக்கூடாது. இது தொடர்பாக இரு தரப்பு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இந்த யோசனைகள் தெரிவிக்கப்பட்டு இருந்தன.
இதையடுத்து நான் தனிப் பட்ட முறையில் 22-9-2006 அன்று உங்களுக்கு கடிதம் எழுதி இருந்தேன். நீண்ட காலமாக இருந்து வரும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும்படியும் இந்திய மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்றும் வற்புறுத் தினேன்.
ஆனாலும் இந்திய மீன வர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், அப்பாவி மீனவர்கள் துன்புறுத்தப் படுவதும், சுட்டுக் கொல் லப்படுவதும் தொடர்கிறது. இது என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. தமிழக மக்களுக்கும் வேதனை அளிக்கிறது.
எனவே தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றியும் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க உரிமை உள்ளது என்பது பற்றியும் இலங்கை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இந்திய மீனவர்களின் உயிரை காப்பாற்ற உடனடி யாக நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக் கொள்கி றேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.