ஆசிரியர் நியமனம்: சிபாரிசுகளை நம்ப வேண்டாம்-அரசு
சென்னை: சீனியாரிட்டி அடிப்படையில்தான் ஆசிரியர் நியமனம் நடைபெறுகிறது. எனவே சிபாரிசு செய்வதாக யாராவது கூறினால் அவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
தற்போதுள்ள அரசு பொறுப்பேற்றவுடன் ஆசிரியர் நியமனங்களை வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்வது என்று முடிவு எடுத்து அதன் அடிப்படையில் ஆசிரியர்களை தெரிவு செய்து வந்தது. அவ்வாறு தெரிவு செய்யும்போது 1:1 என்ற விகிதாச்சாரத்தில் பணி நாடுநர்களின் பட்டியல் பெறப்பட்டது.
இவ்வாறு பெறப்படும்போது ஏராளமான பணிநாடுநர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு வரவில்லை. இதனால் உரிய காலத்தில் அனைத்து ஆசிரியர்களின் பணியிடங்களையும் பூர்த்திசெய்வதில் சற்று காலதாமதம் ஏற்பட்டது.
இந்த காலதாமதத்தை தவிர்க்கும் பொருட்டு வேலை வாய்ப்பகத்தில் பணிநாடுநர் பட்டியல் 1:5 என பெறப்பட்டு சான்றிதழ் சரிபார்க்கும் பணிநடந்து வருகிறது. 1:5 என்ற விகிதத்தில் பட்டியல் பெறப்பட்டாலும் பணி நியமனம் முற்றிலும் வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையிலேயே வழங்கப்படும்.
மேலும் பதிவு மூப்பு அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் 1,621 பேர்களும், பட்டதாரி ஆசிரியர்கள் 3,107 பேர்களும், தமிழ் ஆசிரியர்கள் 360 பேர்களும், இதர ஆசிரியர்கள் 1,313 பேர்களும் தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர்.
வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தான் ஆசிரியர்கள் நியமனம் நடைபெறுகின்றது. வேறு நபர்கள் யாரேனும், தாங்கள் சிபாரிசு செய்து, ஆசிரியர் நியமனம் பெற்றுத்தருகிறோம் என்று கூறினால் ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications