தமிழக மீனவர்கள் ஆயுதம் ஏந்தும் நிலை வரும்-சிபிஐ
நாகை: இலங்கை கடற்படையின் தாக்குதல்களை இந்திய கடற்படை தடுத்து நிறுத்தாவிட்டால் தமிழக மீனவர்கள் ஆயுதம் ஏந்தும் நிலை ஏற்படும் என இந்திய கம்யூனி்ஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
நாகை மாவட்டம் பழையாறில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மீனவர்கள் வாழ்வுரிமை விழிப்புணர்வு பிரசார இயக்க தொடக்க விழா நடந்தது. இதில் பங்கேற்ற பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் கடந்த 40 ஆண்டுகளாக துன்புறுத்தியும் சுட்டுக் கொன்றும் வருகிறது. மீனவர்களின் சொத்துக்களை பறிக்கும் செயல் நடக்கிறது.
மீனவர்களின் உயிரையும் உரிமையையும் காப்பாற்ற வேண்டியது இந்திய கப்பல் படையின் பொறுப்பு. ஆனால் நமது கப்பல் படை யாரையும் காப்பாற்றுவதில்லை. காப்பாற்றுவதற்கான வழியையும் சொல்வதில்லை. இதே நிலை நீடித்தால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மீனவர்களும் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை ஏற்படும்.
சுனாமி தாக்குதலுக்கு பிறகு மீனவர்களுக்கு கட்டித் தரப்பட வேண்டிய வீடுகள், பள்ளிகள் ஆகியவை பெருமளவில் கட்டி தரப்படாமல் உள்ளன.
மீன்பிடி தொழில் குறித்த நவீன தொழில் நுட்பத்தை கற்றுத்தர கல்லூரிகள் அமைத்து அதில் மீனவர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
அணுசக்தி உடன்பாட்டை இந்திய கம்யூனிஸ்டு கட்சி கடுமையாக எதிர்க்கிறது. இந்த உடன்பாடு என்பது அரசு சம்பந்தப்பட்ட கொள்கை விவகாரம்.
இது கீழ்மட்ட மக்களுக்கு தொடர்பு இல்லாதது என்றாலும் இதில் இந்தியா கையெழுத்திட்டால் நாம் போராடி பெற்ற சுதந்திரம் வீணாகி விடும். எனவேதான் அதனை கடுமையாக எதிர்க்கிறோம் என்றார் பாண்டியன்.












Click it and Unblock the Notifications