எங்களை பற்றி நல்ல புரிதல் வேண்டும்-ராமதாஸ்
புதுச்சேரி: எல்லாம் செய்தாகி விட்டது. இனிமேல் செய்ய ஒன்றுமில்லை என்று கூறும் அளவுக்கு பாமகவின் 2 மத்திய அமைச்சர்களும் பணியாற்றியுள்ளனர் என அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
புதுவை ஜிப்மர் மருத்துவமனை தேசிய மருத்துவ மையமாக மாற்றப்பட்டதை கொண்டாடும் வகையில் புதுவை மாநில பாமக சார்பில் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடந்தது.
ஜிப்மர் மருத்துவமனை அருகே பேரணியை டாக்டர் ராமதாஸ் தொடங்கி வைத்தார். கடலூர் சாலை சிங்காரவேலர் சிலை அருகே பேரணி முடிவடைந்தது. இதையடுத்து அங்கு பொதுக் கூட்டம் நடந்தது.
அதில் பேசிய ராமதாஸ்,
ஜிப்மரை தேசிய மருத்துவ நிறுவனமாக மாற்ற உறுதுணையாக இருந்த புதுச்சேரி திமுக அமைப்பாளர் ஜானகிராமன், மத்திய அமைச்சர் நாராயணசாமி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மசோதாவை எதிர்த்தவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அந்த எதிர்ப்பு தான் இந்த சட்டத்தை விரைவாக செய்து முடிக்க தூண்டுகோலாக இருந்தது.
ஜிப்மரை தேசிய நிறுவனமாக மாற்றுவதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி மேற்கொண்ட முயற்சிகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
டெல்லி, சண்டீகரை அடுத்து புதுவையில் ஒரு தேசிய நிறுவனத்தை கொண்டு வந்த பெருமை பாமகவுக்கு உண்டு.
கடந்த 1988ம் ஆண்டு முதல் மத்திய அரசில் அமைச்சர் பொறுப்பு வகித்து வருகிறோம். அப்போதே ஜிப்மர் வளர்ச்சிக்காக ஒரு திட்டம் தீட்டப்பட்டது. அந்த வளர்ச்சி அப்போதே வந்திருந்தால் இன்று ஜிப்மர் மருத்துவமனை உலகளவில் ஒரு சிறந்த மருத்துவமனை என்ற நிலையை அடைந்திருக்கும்.
ஆனால், எத்தனையோ முட்டுக் கட்டைகள் போட்டனர். அதை எல்லாம் தாண்டி வந்துள்ளோம்.
இந்திய சுகாதார அமைச்சரை உலக நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் சந்திக்க மறுத்த காலம் போய், உலக நாடுகளில் சுகாதார துறை அமைச்சர்கள் இந்திய சுகாதார அமைச்சரை சந்திக்க 'அப்பாயின்மெண்ட்' கேட்கும் நிலை தற்போதுள்ளது.
பாமக வித்தியாசமான கட்சி என்பதையும் ஒவ்வொரு முறையும் நிரூபித்து வந்துள்ளோம். எல்லாம் செய்தாகி விட்டது. இனிமேல் செய்ய ஒன்றுமில்லை என்று கூறும் அளவுக்கு பாமகவின் 2 மத்திய அமைச்சர்களும் பணியாற்றியுள்ளனர்.
பாமகவின் தொலை நோக்கு பார்வையும் அணுகுமுறை தான் இதற்குக் காரணம்.
இந்திய மாநிலங்களில் முன்னணி மாநிலமாக புதுவையை கொண்டு வர எங்களால் முடியும். அதற்கு எங்களைப் பற்றிய நல்ல புரிதல் வேண்டும் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications