அண்ணா பல்கலைக்குள் செல்போன் கொண்டு வரலாம் - துணைவேந்தர்
சென்னை: அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தராகப் பதவியேற்றுள்ள மன்னர் ஜவஹர், முதல் உத்தரவாக, இதுவரை இருந்து வந்த செல்போன் தடையை நீக்கியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக பேராசிரியர் மன்னர் ஜவஹர் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று அவர் தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவருக்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை மன்னர் ஜவஹர் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த 3 வருடங்களில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய கேம்பஸ் இன்டர்வியூ மூலம் சுயநிதி கல்லூரிகளைச் சேர்ந்த 22 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு வேலை கிடைத்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவ, மாணவியர் 9 ஆயிரம் பேரும் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகள் யாரும் செல்போன் கொண்டு வரவோ, பயன்படுத்தவோ தடை உள்ளது. மாணவ, மாணவிகளை பெற்றோர்கள் தொடர்புகொள்ள அல்லது மாணவர்கள் அவசியமாகத் தொடர்புகொள்ள செல்போன் தேவைப்படுகிறது. அதை கருத்தில் கொண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் இனிமேல் மாணவ, மாணவிகள் செல்போன் கொண்டு வரலாம்.
ஆனால் வகுப்பறையில் நுழையும் முன் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட வேண்டும். அதாவது வகுப்புநேரமான காலை 8.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 1.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி வரையிலும் சுவிட்ச் ஆப் செய்து விட வேண்டும்.
இடைப்பட்ட நேரத்தில் அல்லது சாப்பாட்டு நேரத்தில் வகுப்புக்கு வெளியே வந்து பேசலாம். ஆனால் நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு பயன்படுத்தக் கூடாது. அவசியம் ஏற்படும்போது மட்டும் பயன்படுத்த வேண்டும்.
இருப்பினும் ஆடைக் கட்டுப்பாடு தொடர்ந்து அமலில் இருக்கும். நாகரீகமான உடைகளை அணியலாம். மாணவர்களும், மாணவிளும் டீ சர்ட் உள்ளிட்ட பனியன் வகைகளை அணியக் கூடாது. ஜீன்ஸ் அணியக் கூடாது. மற்றபடி நாகரீகமான முறையில் உடைகள் அணியத் தடை இல்லை.
பல தொழிற்சாலைகளுடன் தொடர்பு கொண்டு மாணவர்கள் படிக்கும்போதே, தொழிற்சாலைகள் மற்றும் கம்ப்யூட்டர் கம்பெனிகளுக்கு பயிற்சி பெறுகிறார்கள். இதற்கு நிறைய நிறுவனங்கள் ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். இதனால்தான் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.
சிலதனியார் பொறியியல் கல்லூரிகள் நல்ல கட்டமைப்பு வசதிகளுடன் உள்ளன. நல்ல கட்டமைப்பு வசதி, தகுதியுள்ள, போதுமான ஆசிரியர்கள் இருந்தால்தான் தரமான மாணவர்களை உருவாக்க முடியும். மதிப்பெண் சற்று குறைவாக இருந்தாலும் ஆசிரியர்கள் நன்றாக இருந்தால், மாணவர்கள் படித்து முடித்து வரும்போது தரமாக வெளி வரமுடியும். வேலைவாய்ப்பும் எளிதாக கிடைக்கும்.
ஆசிரியர்கள் பற்றாக்குறை, கட்டமைப்பு வசதி சரியாக இல்லாவிட்டால் அந்தக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். தமிழகத்தில் உள்ள நான்கு அண்ணா பல்கலைக்கழகங்களிலும் பொதுவான பாடத்திட்டம் இருந்தால் நல்லது. தற்போது 90 சதவீத பாடத் திட்டம் பொதுவாகத்தான் உள்ளது. 10 சதவீதம்தான் வேறுபடுகிறது. இது பெரிய மாற்றம் இல்லை.
என்ஜீனியரிங் படிப்பை தமிழிலும் கற்பிக்க ஏற்பாடு செய்யப்படும். ஆனால் கேம்பஸ் இன்டர்வியூவுக்கு வரும் நிறுவனங்கள் ஆங்கிலத்தில் பேசத் தெரிந்தவர்களைத்தான் விரும்புகிறார்கள் என்றார் ஜவஹர்.
இதுவரை இருந்த துணைவேந்தர் விஸ்வநாதன், செல்போன்களை பயன்படுத்த விதித்த கடுமையான தடையால், மாணவ, மாணவியர் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர். தற்போது அந்தத் தடையை நீக்கி முதல் உத்தரவைப் பிறப்பித்துள்ளார் புதிய துணைவேந்தர் மன்னர் ஜவஹர்.












Click it and Unblock the Notifications