மும்பை மாணவர்களுக்கு தமிழாசிரியர்கள் அனுப்ப தயார்: கருணாநிதி
சென்னை: மும்பையில் தமிழ்மொழி வழியில் தொடக்கக் கல்வி கல்வி பயிலும் 15 ஆயிரம் மாணவ, மாணவியரும், தொடர்ந்து தமிழ் வழியிலேயே படிக்க அனுமதிக்க வேண்டும். தேவைப்பட்டால் தமிழாசிரியர்கள், புத்தகங்களை மும்பைக்கு அனுப்ப தயார் என மகாராஷ்டிர மாநில முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கிற்கு முதல்வர் கருணாநிதி கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தேஷ்முக்கிற்கு எழுதியுள்ள கடிதம்:
8 மொழிகளில் தொடக்கக்கல்வியை நடத்தி வரும் மும்பை மாநகராட்சி, இந்த செயல்பாடு மூலம் உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளது. இந்த எட்டு மொழிகளில் தமிழும் ஒன்றாக இருப்பதை கேள்விப்பட்டபோது நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
இதனால் அங்குள்ள 48 பள்ளிகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மாணுவ, மாணவிகள் பயன் பெறும் வகையில், நீங்கள் ஆற்றி வரும் சேவையை நான் பெரிதும் பாராட்டுகிறேன்.
ஆனால் அங்கு 8ம் வகுப்பு தமிழ் மாணவர்கள், தங்கள் தேர்வுகளை ஆங்கிலத்தில் எழுதும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாக நான் கேள்விப்பட்டேன். ஆனால் அங்குள்ள குஜராத், கர்நாடக மாநில மாணவர்கள் தங்களது தாய்மொழியில் தேர்வுகளை எழுத அனுமதிக்கப்படுவதாகவும் தெரிய வருகிறது. இது பிரிவினையாகும்.
சில நிர்வாக காரணங்களுக்காக இப்படிப்பட்ட முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. கடந்த 7 ஆண்டுகளாக தமிழில் படித்த மாணவர்களை திடீரென்று ஆங்கிலத்தில் தேர்வு எழுதச்சொல்வதால், அவர்களுக்கு எப்படிப்பட்ட சங்கடங்கள், நெருக்கடிகள் நேரும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும்.
ஆரம்பக் கல்வியை தாய் மொழியில் சொல்லித் தரும் சேவை மகத்தானது. அந்த சேவையை நீங்கள் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அங்கு மாணவர்களுக்கு தமிழ் சொல்லித் தருவதற்கா தமிழ்ப் பாடப் புத்தகங்கள், நோட்டுகள், தமிழ் ஆசிரியர்கள் தேவைப்பட்டால், உடனடியாக மும்பை மாநகராட்சிக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு தயாராக இருக்கிறது. 8ம் வகுப்பிலும் தமிழ் மாணவர்களை தமிழையே தொடர வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம்.
இந்த விஷயத்தில் சாதகமான நிலை எடுத்து அங்குள்ள 15 ஆயிரம் தமிழ் மாணவர்களின் வாழ்க்கைக்கு உதவுவீர்கள் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications