விலைவாசி உயர்வு விஷம்!-ஜனநாயக மாதர் சங்கம் விளாசல்!!
நாகை: மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறியது போல் விலைவாசி உயர்வு கசப்பு மருந்து அல்ல, அது ஒரு விஷம் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொதுச் செயலாளர் வாசுகி கருத்து தெரிவித்துள்ளார்.
நாகையில் நடைபெற்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க 12 வது மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்ட மாநில பொதுச் செயலாளர் வாசுகி பேசுகையில், மேட்டூரில் தண்ணீர் திறந்து நாகை வந்து விட்டாலும், திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு விவசாயத்திற்கு போதுமானதாக இல்லை என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் தீண்டாமை இல்லை என்று பலர் சொன்னாலும், சீர்காழி, கொள்ளிடம் போன்ற இடங்களில் தீண்டாமை கொடுமை இன்றளவும் நிலவிவருகிறது.
நாகை, திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவ மனைகளில் போதுமான அளவு டாக்டர்கள் இல்லை. எனவே இப் பிரச்சனைக்கு அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது.
பிரதமர் எப்போதும் ஜார்ஜ் புஷ் -சையும் அணு சக்தி ஒப்பந்தத்தையும் மட்டுமே நினைத்துக் கொண்டு உள்ளார். இதனால் அவருக்கு பசி இல்லை, தூக்கம் இல்லை. தேசத்திற்கும் மக்களுக்கும் நன்மை செய்யாத அந்த ஒப்பந்தத்தை நினைத்து தான் கவலைப்பட்டுக் கொண்டு உள்ளார். அவருக்கு பசி ஒரு பிரச்சினை இல்லை.
நாடு வளர வளர விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளை சந்தித்து தான் ஆக வேண்டும் இது கசப்பு மருந்து என்கிறார் மத்திய நிதி அமைச்சர். ஆனால் இது கசப்பு மருந்து அல்ல. அது ஒரு விஷம் என்பது சாதாரண மக்களுக்கு மட்டுமே தெரியும்.
தடுப்பு ஊசி தயாரிக்கும் மூன்று நிறுவனங்களை மூட உத்தரவிட்டுள்ள மத்திய அமைச்சர் அன்புமணி, தனியாரிடம் கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். அப்படி செய்வது ஆபத்தானது என்றார் வாசுகி.












Click it and Unblock the Notifications