எத்தனை கூட்டணி வைத்தாலும் திமுக வராது-டி.ஆர்
கோவை: தமிழக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால் எத்தனை கட்சிகளுடன் கூட்டணி வைத்தாலும் இனி மேல் திமுக ஆட்சிக்கு வரவே முடியாது என்று லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் கருத்து தெரிவித்துள்ளார்.
கோவையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகம் முழுவதும் இதுவரை 19 மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்து அரசியல் நிலவரங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறேன்.
விலைவாசி உயர்வு, பெட்ரோல்,டீசல் விலை அதிகரிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு, மின்சார தட்டுப்பாடு, போன்ற பல பிரச்சனைகளால் மக்கள் மத்திய, மாநில அரசுகள் மீது கசப்புணர்வு கொண்டுள்ளனர்.
மக்களுக்கு இலவச டி.வி. தருவதாக சொல்கிறார்கள். ஆனால் அது மக்களுக்கு போய்ச் சேர்வதில்லை. அப்படியே சேர்ந்தாலும் அந்த டி.வி.க்கள் வெடிக்கின்றன. இது தான் தமிழக அரசின் இலவச கலர் டி.வி. திட்டத்தின் லட்சனம்.
காங்கிரஸ் போன்று எத்தனை கட்சிகளுடன் கூட்டணி வைத்தாலும் இனி மேல் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரவே முடியாது.
ஆன்லைன் வர்த்தகத்தால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பயன் எதுவும் இல்லை. ஆனால் பண முதலைகளுக்கும் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் தான் லாபம்.
காங்கிரசை அடியோடு அழிப்பதற்கு அவதாரம் எடுத்தவர் தான் ப.சிதம்பரம் என்றார் ராஜேந்தர்.












Click it and Unblock the Notifications