முலாயமின் காங். ஆதரவு நிலை: நாயுடு அப்செட்-உடைகிறது 3வது அணி?
டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும் மனநிலைக்கு முலாயம்சிங் யாதவ் மாறி வருவதால் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு அப்செட் ஆகியுள்ளார். இதனால் 3வது அணி உடையக் கூடிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் இடதுசாரிகள் தங்களது நிலையை இறுதியாக தெரிவித்து விட்டன. அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக அரசு எடுத்து வைக்கும் அடுத்த அடி, தங்களது பொலிட்பீரோ கூட்ட முடிவுக்கு முரண்பாடாக இருந்தால் ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவோம் என சிபிஎம் திட்டவட்டமாக அறிவித்து விட்டது.
அதேசமயம், அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது உறுதி என பிரதமர் மன்மோகன் சிங்கும் தெரிவித்து விட்டார். ஜூலை 7ம் தேதி ஜி-8 மாநாட்டில் கலந்து கொள்ள மன்மோகன் சிங் செல்கிறார். அவரது பயணம் திட்டமிட்டபடி நடந்தால், ஆட்சியைக் கவிழ்க்கும் முடிவை இடதுசாரிகள் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முலாயம் சிங் யாதவிடம் துண்டு போட்டு வைத்துள்ளது காங்கிரஸ். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவளிக்க முலாயமும் தயாராகி விட்டதாக தெரிகிறது.
முலாயமின் இந்தப் போக்கால் 3வது அணியில் உள்ள முக்கிய கட்சியான தெலுங்குதேசம் அப்செட் ஆகியுள்ளது. இந்த விவகாரம் குறித்துப் பேச தனது கட்சி முக்கிய தலைவர் ராம் மோகன் ராவை, முலாயம் சிங்கிடம் அனுப்பினார் சந்திரபாபு நாயுடு.
அவரிடம், காங்கரிஸ் ஆதரவு கேட்டிருப்பதாக ஒத்துக் கொண்டார் முலாயம். ஆனால் நமது கூட்டணிதான் ஏற்கனவே வேறு மாதிரியான முடிவில் உள்ளதே என்று ராவ் கேட்டதற்கு, அதனால் என்ன அதனை மறு பரிசீலனை செய்ய வேண்டியதுதான் என்று கூறியுள்ளார் முலாயம் சிங்.
இதனால் நாயுடு அப்செட் ஆகியுள்ளார். இந்தச் சூழ்நிலையில், 3ம் தேதி ஓம் பிரகாஷ் செளதாலா வீட்டில் நடைபெறவுள்ள 3வது அணி கூட்டத்தில் நாயுடு கட்சி கலந்து கொள்ளுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒரு வேளை இக்கூட்டத்தில் காங்கிரஸுக்கு ஆதரவு தரும் முடிவு எடுக்கப்பட்டால், 3வது அணியிலிருந்தே தெலுங்குதேசம் வெளியேறும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், முலாயம் சிங்கைப் போலவே, அஜீத் சிங்கின் கட்சியையும் வளைக்க முடிவு செய்துள்ளது காங்கிரஸ். இதுதொடர்பாக பிரணாப் முகர்ஜி அஜீத் சிங்கிடம் பேசவுள்ளார்.
முதலில் பாஜகவுடன் சேருவதற்கு வசதியாக மூன்றாவது அணியை விட்டு வெளியேறினார் ஜெயலலிதா. இப்போது அந்த அணியே கலகலத்துப் போயுள்ளது.












Click it and Unblock the Notifications