சாதாரண பெட்ரோல் விநியோகம்: மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை: தமிழகத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் சாதாரண பெட்ரோல், டீசல்விநியோகம் இல்லாதது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய பெட்ரோலியத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை நகரிலும் தமிழகத்தின் இதர பகுதிகளிலும் சாதாரண பெட்ரோல், டீசல் விற்பனை நின்று பல நாட்களாகி விட்டது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், சாதாரண பெட்ரோல், டீசல் விற்பனையை நிறுத்தி விட்டு விலை உயர்ந்த பிரீமியர், பவர் வகை பெட்ரோல், டீசல் விற்பனை நடப்பதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் என்ற வக்கீல் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனுவைத் தாக்கல்
செய்தார்.
அதில், மக்கள் நலனைக் கருத்திக்கொள்ளாமல் லாப நோக்கில் மத்திய அரசு இப்படி விலை உயர்ந்த பெட்ரோல், டீசலை விற்கிறது. இதைத் தடுத்து, சாதாரண பெட்ரோல், டீசலை அதிக அளவில் விற்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நேற்று தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள் இதுகுறித்து ஜூலை 4ம்தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறி மத்திய பெட்ரோலியத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். வழக்கும் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications