பாம்பு கடித்த பெண்ணின் சடலத்துடன் சட்டசபை முற்றுகை !
புதுச்சேரி: புதுச்சேரியில் பாம்பு கடித்து பலியான பெண்ணின் உடலை சட்டசபை முன் வைத்து அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி ஏரிபாக்கம் அருகில் உள்ள கரியமாணிக்கம் காலனியை சேர்ந்தவர் பாண்டுரங்கன். கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜோதி (22).
வீட்டின் அருகில் நடந்து சென்ற போது ஜோதியை பாம்பு கடித்து விட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் காப்பாற்றி நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்ற போது அங்கு பாம்பு கடிக்கு உரிய மருந்து இல்லை என்று சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனராம். மேலும் முதலுதவி செய்ய கூட டாக்டர்கள் அங்கு இல்லை என கூறப்படுகிறது.
இதனால் ஜோதியை புதுச்சேரி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் போது வழியிலே பரிதாபமாக இறந்தார்.
பிரேத பரிசோதனைக்கு பின்பு ஜோதியின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதை அவர்கள் எடுத்துக் கொண்டு ஆவேசத்துடன் புதுச்சேரி சட்டசபைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சட்டடசபை நுழைவுவாயில் முன்பு அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் அங்கு அவர்கள், ஜோதியின் பிரேதத்துடன் மறியலில் ஈடுபட்டனர். சுகாதாரத்துறை அமைச்சர் வல்சராஜ், அமைச்சர் வைத்தியலிங்கம் ஆகியோர் பதவி விலககோரி கோஷம் எழுப்பினர். அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.












Click it and Unblock the Notifications