பிரகாஷ் காரத்-பர்தானுடன் நாயுடு சந்திப்பு
டெல்லி: தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று, பிரகாஷ் காரத், ஏ.பி. பர்தான் ஆகியோரை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
அணு சக்தி ஒப்பந்த விவகாரம் தொடர்பான விவகாரத்தில், காங்கிரஸுக்குக் கை கொடு தயாராகி விட்டார் முலாயம் சிங். இதனால் 3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக்கூட்டணி உடையக் கூடிய வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள முக்கிய கட்சியான தெலுங்குதேசம், காங்கிரஸுக்கு ஆதரவு தருவதை விரும்பவில்லை. காரணம், தெலுங்குதேசத்தின் முக்கிய எதிரிக்கட்சி காங்கிரஸ். எனவே காங்கிரஸ் அரசைக் காக்க ஆதரவு தருவதற்கு தெலுங்குதேசம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
ஆனால் சில பல நிபந்தனைகளுடன் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவளிக்க தீர்மானித்து விட்டார் முலாயம் சிங் யாதவ்.
இந்த நிலையில் இடதுசாரிகளுடன் அணி சேர சந்திரபாபு நாயுடுவும் ரெடியாகி விட்டார். அதற்கு முன்னோட்டமாக இன்று மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தையும், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ஏ.பி. பர்தானையும் நாயுடு சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இன்று மூன்றாவது அணியின் கூட்டம் நடக்கவுள்ள நிலையில் அந்த அணியைச் சேர்ந்த நாயுடு தனியே கழன்றுபோய் இடதுசாரிகளை சந்தித்துள்ளார்.
இதன்மூலம் முலாயம் காங்கிரஸ் பக்கமும் நாயுடு இடதுசாரிகள் பக்கமும் சாய்ந்துள்ளனர். இதனால் மூன்றாவது அணி என்பதே விரைவில் காணாமல் போகலாம்.