எய்ம்ஸ் இயக்குநர் வேணுகோபால் ஓய்வு பெற்றார்
டெல்லி: பெரும் பரபரப்புக்கு மத்தியில் டெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக இயக்குநராகப் பணியாற்றி வந்த டாக்டர் வேணுகோபால் நேற்று அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸுக்கும், டாக்டர் வேணுகோபாலுக்கும் இடையே கடும் பனிப் போர் நடந்தது. மருத்துவ உயர் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தை தூண்டிவிட்டார் என இவர் மீது அன்புமணி குற்றம் சாட்டினார்.
மேலும் டாக்டர் வேணுகோபாலை பணியிலிருந்து அகற்ற சட்டத் திருத்தமும் கொண்டு வரப்பட்டது. ஆனால் அது செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்தது. இதையடுத்து மே 8ம் தேதியன்று மீண்டும் எய்ம்ஸ் இயக்குநராகப் பணியில் அமர்ந்தார் வேணுகோபால்.
தற்போது, 66 வயதானதால் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார் வேணுகோபால். இதையடுத்து டி.டி.டோக்ரா புதிய இயக்குநராக பதவியேற்கிறார்.
இதனிடையே, வேணுகோபாலுக்கு மேலும் 6 மாத காலம் பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
மீரா மிஸ்ரா என்பவர் அந்த மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், இதய நோயால் பாதிக்கப்பட்ட எனது மகனுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் வேணுகோபால்தான் சிகிச்சை அளித்து வருகிறார். இந்நிலையில் சிகிச்சை முடிவதற்குள் அவர் பணி ஓய்வு பெறவுள்ளார். இதனால் எனது மகனின் சிகிச்சை பாதிப்படையும் நிலை உள்ளது. எனவே, அவர் 6 மாதம் பணியில் நீட்டிக்க உத்தரவிட்டு உதவ வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி சிஸ்தானி முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோன்ற நிலையில் ஒரு நோயாளிக்காக இயக்குநர் வேணுகோபாலுக்கு பணி நீட்டிப்பு வழங்க இயலாது எனக் கூறி, அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.
ஓய்வால் வருத்தமில்லை: வேணுகோபால்
இந் நிலையில், பணியிலிருந்து ஓய்வு பெறுவதில் எந்தவித வருத்தமும் இல்லை என்று டாக்டர் வேணுகோபால் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பதவி விலகுவதில் எந்த வருத்தமும் இல்லை. மீண்டும் ஒரு முறை பிறந்தால், எய்ம்ஸ் நிறுவனத்தில் பணியாற்ற விரும்புகிறேன். வாழ்நாளில் 49 ஆண்டுகள் இங்கு பணியாற்றியுள்ளேன்.
என் பதவிக் காலம் முடிந்து ஓய்வு பெறுவதில், எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நிறுவனத்தில் பணியாற்றியதில் எனக்கு திருப்தியே. கடந்த 10 ஆண்டுகளில் இந்நிறுவனம் சிறந்த நிறுவனமாகியுள்ளது.
நான் மறுபடியும் பிறந்தால், இங்குவந்து பணியாற்ற விரும்புகிறேன். ஓய்வு பெற்ற நான், இனி, ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் அக்கறை காட்டுவேன். மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றுவேன் என்றார் வேணுகோபால்.












Click it and Unblock the Notifications