ஆதரவு தர காங்கிரஸுக்கு சமாஜ்வாடி நிபந்தனை!
பெரும் பரபரப்பான சூழலின் பின்னணியில் இன்று 3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக்கூட்டணியின் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் முலாயம் சிங்யாதவ், சந்திரபாபு நாயுடு, ஓம் பிரகாஷ் செளதாலா உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்கு முன்புதான் சந்திரபாபு நாயுடு, இடதுசாரித் தலைவர்கள் பிரகாஷ் காரத், பர்தான் ஆகியோரை சந்தித்துப் பேசியிருந்தார். நேற்று முலாயம் சிங் யாதவும், அமர்சிங்கும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சந்தித்துப் பேசினர்.
முலாயம் சிங்யாதவ், காங்கிரஸ் கூட்டணிக்குஆதரவாக திரும்பி வருகிறார். சந்திரபாபு நாயுடுவோ காங்கிரஸுக்கு ஆதரவு தரக்கூடாது என்ற கருத்தில் இருப்பவர்.
எனவே இன்றைய கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படும் என்பது தெரியாமல் இருந்து வந்தது. இந்தப் பின்னணியில் இன்று 3வது அணியின் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்குப் பின்னர் அமர்சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான எங்களது சந்தேகங்களுக்கு பிரமதர் பதிலளித்துள்ளார். இருப்பினும் அணு அறிவியல் புகழ் பெற்ற ஒரு நிபுணர் இதுகுறித்து விளக்கினால் நலமாக இருக்கும்.
அந்த நிபுணரின் பெயரை முலாயம் சிங் யாதவ் பரிந்துரைப்பார். அவரிடம், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாகவும், அதுகுறித்த பிரதமரின் விளக்கத்தையும் கொடுத்து தெளிவுரை கேட்போம்.
விலைவாசி உயர்வு, பண வீக்கம் ஆகியவை தொடர்பாக அரசு மீது ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி வைத்துள்ள கருத்தில், நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.
சந்திரபாபு நாயுடு:
தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறுகையில்,அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் இன்னும் பல விஷயங்களை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.
இதுதொடர்பாக தேசிய அளவிலான விவாதத்தை நடத்த பிரதமர் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த ஒப்பந்தம் தொடர்பாக நிறைய குழப்பங்களும், சந்தேகங்களும் உள்ளன. அவை தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றார்.
இந்திய தேசிய லோக்தள தலைவர் ஓம் பிரகாஷ் செளதாலா கூறுகையில், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் அளித்துள்ள விளக்கம் திருப்தி தரும் வகையில் இல்ைல என்றார்.
காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு என்ற நிலையை இன்று மூன்றாவது அணி எடுக்கவில்லை. இதனால் காங்கிரஸ் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
முலாயம் நிபந்தனைகள்-காங். கலக்கம்:
முன்னதாக, காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தருவதற்குப் பதிலாக சில நிபந்தனைகள் அடங்கிய பட்டியலை சமாஜ்வாடி கட்சி அனுப்பி வைத்தது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் காரணமான பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா, விலைவாசி உயர்வுக்குக் காரணமான நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் உடனடியாக வேறுதுறைகளுக்கு மாற்றப்பட வேண்டும். அந்த இரு பொறுப்புகளையும் சமாஜ்வாடிக் கட்சிக்கு தர வேண்டும்.
சமாஜ்வாடிக் கட்சிக்கு முக்கிய அமைச்சர் பொறுப்பை வழங்க வேண்டும். குறிப்பாக தொலைத்தொடர்புத்துறையை வழங்க வேண்டும்.
மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை முற்றிலும் கைவிட்டு விட வேண்டும்.
உ.பியில் சமாஜ்வாடிக் கட்சியை மேஜர் பார்ட்னராகக் கொண்டு புதிய கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற வேண்டும்.
முலாயம் சிங் யாதவ் மீதான சிபிஐ வழக்குகளில் நிதானம் காட்டப்பட வேண்டும்.
இப்படி பல நிபந்தனைகளைப் போட்டு பட்டியலை காங்கிரஸிடம் அளித்துள்ளதாம் சமாஜ்வாடிக் கட்சி.
இந்த நிபந்தனைகளின் அடிப்படையில், காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு முலாயம் கட்சி ஆதரவளிக்கும் என்று தெரிகிறது. காங்கிரஸ் கட்சியிடமிருந்து சாதகமான பதில்வந்தவுடன் இன்று நடைபெறும் ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி கூட்டத்தில் இதுதொடர்பான இறுதி முடிவை முலாயம் கட்சி எடுக்கும் என்று தெரிகிறது.
சமாஜ்வாடிக் கட்சியின் இந்த நெருக்கடியான நிபந்தனைகள் குறித்து காங்கிரஸ் தலைவர்களின் கூட்டத்தை சோனியா காந்தி அவசரமாக கூட்டியுள்ளார். இக்கூட்டத்தில் முலாயம் சிங்கின் கோரிக்ைககள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
முலாயம், அமர்சிங்குடன் நாராயணன் சந்திப்பு:
முன்னதாக நேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் நேற்று முலாயம் சிங்யாதவ் மற்றும் அமர்சிங்கை ரகசிய இடத்தில் வைத்து சந்தித்துப் பேசினார். அப்போது அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக இருவரிடமும் நாராயணன் விவாதித்தார்.
அதன் பின்னர் அமர்சிங் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், எங்களது சில சந்ேதகங்களை நாராயணனிடம் தெரிவித்தோம். அதற்கு அவர் விளக்கமளித்தார்.
இந்த விவகாரம் குறித்து மக்கள் மத்தியில் நிலவும் சந்தேகங்களைப் போக்கும் வகையில், பிரதமர் அலுவலகம் வெளிப்படையான அறிக்ைக ஒன்றை வெளியிட வேண்டும் என நாராயணனிடம் தெரிவித்தோம். அப்படி தெரிவித்தால்தான் ஆதரவு தர முடியும் எனவும் அவரிடம் தெரிவித்தோம்.
வகுப்புவாத சக்திகள் இன்று நாட்டின் மிகப் பெரிய எதிரிகளாக உள்ளனர். அணு சக்தி ஒப்பந்தம் நாட்டுக்கு எதிரானதல்ல. வியாழக்கிழமை நடைபெறும் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி கூட்டத்தில் காங்கிரஸுக்கு ஆதரவளிப்பது குறித்து விவாதிக்கப்படும் என்றார் அமர்சிங்.
மன்மோகன் ஜி-8 மாநாட்டுக்குப் போவார்:
இதற்கிடையே, ஜப்பானில் நடைபெறவுள்ள ஜி-8 மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்வார் என பிரதமரின் சிறப்பு தூதர் ஷியாம் சரண் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பிரதமர் கண்டிப்பாக ஜப்பான் செல்கிறார். அதில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை.
அணுபொருள் வினியோகம் செய்யும் 45 நாடுகளின் ஒப்புதலை பெற இந்தியாவிற்கு போதுமான கால அவகாசம் இருக்கிறது. இந்த நாடுகள் அனுமதி அளித்து விட்டால் அடுத்து அமெரிக்க பாராளுமன்றத்திற்கு அணுசக்தி ஒப்பந்தம் எடுத்து செல்லப்படும். அங்கு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அங்கீகாரம் பெறப்படும்.
அதிபர் புஷ் பதவி காலம் முடிவதற்கு முன்பாகவே அதாவது, டிசம்பர் மாதத்துக்குள் அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்த அனுமதி கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
ஜப்பான் பயணத்தில் தவறில்லை காங்.:
இந்த நிலையில் பிரதமரின் ஜப்பான் பயணத்திற்கும், அணு சக்தி ஒப்பந்தத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்ைல. எனவே இதை இடதுசாரிகள் பெரிய பிரச்சினையாக கருதக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜி-8 நாடுகளின் உச்சி மாநாட்டு பயணத்துக்கும், அணுசக்தி ஒப்பந்தத்துக்கும் தொடர்பு இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங்கோ அல்லது பிரதமர் அலுவலகமோ எதுவும் தெரிவிக்கவில்லை. ஜி-8 நாடுகள் உச்சி மாநாட்டையும், அணுசக்தி ஒப்பந்தத்தையும் தொடர்புபடுத்துவது தவறானது.
2007-ல் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலின் போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை கவிழ்க்க பாரதீய ஜனதா தலைவர் ஜஸ்வந்த் சிங் முயற்சி செய்தார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இது 2004-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் தோல்வியை பாரதீய ஜனதா கட்சியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று நாங்கள் கூறியதை நிரூபிப்பதாக உள்ளது.
மேலும் பாரதீய ஜனதா கட்சியின் உண்மையான உருவத்தை இந்த தகவல்கள் வெளிப்படுத்தி உள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை கவிழ்க்க முயன்றது பற்றி ஜஸ்வந்த் சிங் பகிரங்க விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.