அணு ஒப்பந்தம் நாட்டை பாதிக்காது: பிரதமர் அலுவலகம்
டெல்லி: அணு சக்தி ஒப்பந்தத்தால் நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்று பிரதமர் அலுவலகம் விளக்கியுள்ளது.
சமாஜ்வாடிக் கட்சியின் கோரிக்கையை ஏற்று இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் ஒருஅறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தால் நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
நாட்டின் பாதுகாப்புத் திட்டங்களை இந்த ஒப்பந்தம் எந்தவகையிலும் பாதிக்காது.
அணு குண்டு சோதனை நடத்துவதற்கும் இந்த ஒப்பந்தம் எந்த வகையிலும் தடையாக இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழப்பத்தில் இடதுசாரிகள்:
இதற்கிடையே, மன்மோகன் அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை எப்போது வாபஸ் பெறுவது என்பதில் இடதுசாரிகளிடையே குழப்பம் நிலவி வருகிறது.
பிரதமர் மன்மோகன் சிங் ஜி-8 மாநாட்டுக்குப் போனால் ஆதரவை வாபஸ் பெறலாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார். இதே முடிவைத்தான் அக்கட்சியின் பொலிட்பீரோவும் எடுத்துள்ளது.
ஆனால் மன்மோகன் சிங் அவரது பாதையில் போக முடிவு செய்து விட்ட பிறகு எதற்காக நாம் காத்திருக்க வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஏ.பி.பர்தான் கூறியுள்ளார்.
இதுகுறித்து பர்தன் கூறுகையில், அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும், அந்தக் கோணத்தில்தான் உள்ளது. எனவே அவர்கள் ஜப்பான் போகும் வரை நாம் காத்திருக்கத் தேவையில்லை. அதுகுறித்து 4ம் தேதி முடிவு செய்யப்படும் என்றார் பர்தன்.
முன்னதாக நேற்று மதச்சார்பற்ற ஜனதாதள தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவெ கெளடாவை பர்தன் நேற்று சந்தித்தார். கெளடவிடம் 2 எம்.பிக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் எர்ரான் நாயுடுவும் பர்தனை சந்தித்துப் பேசினார்.