அடுத்தடுத்து 1 கைதி, 3 சிறார்கள் தப்பியோட்டம்
வேலூர்: வேலூரில் இன்று ஒரு கைதியும், சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து 3 சிறார்களும் தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையைச் சேர்ந்தவர் பாருக். இவர் கொள்ளை வழக்கில் கைதாகி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வேறு ஒரு வழக்கில் இவரை கோர்ட்டுக்குக் கொண்டு போன போலீஸார் இன்று மீண்டும் சிறைக்கு அழைத்து வந்தனர்.
அப்போது பாகாயம் பேருந்து நிலையத்தில் பஸ்ஸுக்காக காத்திருந்தபோது, சிறுநீர் வருவதாக பாருக் கூறியுள்ளார். அவரை கழிப்பறைக்கு அனுப்பி விட்டு வெளியே போலீஸார் நின்றுள்ளனர்.
ஆனால், சிறுநீர் கழிப்பதாக கூறி விட்டு உள்ளே சென்ற பாருக், சுவர் ஏறிக் குதித்து தப்பி விட்டார்.
இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களில்,வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருந்த 3 சிறுவர்கள் மதில் சுவர் ஏறி தப்பி ஓடி விட்டனர்.
இந்த மூன்று பேரும் கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள். அவர்களைத் தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.