ஈவி டீஸிங்: சுளுக்கெடுத்த சுடிதார் போலீஸ்!
சென்னை: சென்னையில் சுடியதார் அணிந்த பெண் போலீஸாரை கிண்டல் செய்த 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இதுவரை இம்மாதிரி 500 வாலிபர்களை சென்னை போலீஸ் கைது செய்துள்ளதாக இணை கமிஷனர் ரவி தெரிவித்துள்ளார்.
வடசென்னையில் பெண்களை கேலி-கிண்டல் செய்து ஈவ்டீசிங்' செய்யும் ஆசாமிகளை அதிரடியாக பிடிக்க கமிஷனர் சேகர் உத்தரவின் பேரில் சுடிதார் படை என்ற பெயரில் பெண் போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படையில் பெண் போலீசார் 25 பேர் இடம் பெற்றுள்ளனர்.
பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இந்திராணி, ஏட்டுகள் லதா, ஜெயா, நிர்மலா, சுமதி ஆகியோர் இந்த சுடிதார் படையில் முக்கிய இடம் பெற்றுள்ளனர். இவர்கள் சுடிதார் அணிந்து கொண்டு கல்லூரி மாணவிகள் வேடத்தில் பிராட்வே பஸ் நிலையம், தங்க சாலை பஸ் நிலையம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பார்கள். பெண்களை கேலி செய்யும் ஆசாமிகளை அதிரடியாக மடக்கி பிடித்து இவர்கள் கைது செய்து வருகிறார்கள்.
நேற்று காலையில் பிராட்வே பஸ் நிலையம் பகுதியில் சுடிதார் பெண் போலீஸ் படையினரை, போலீஸ் என்று தெரியாமல் பீச்சுக்கு போகலாம் வாரியா' என்று சில வாலிபர்கள் கேலியும், கிண்டலுமாகப் பாட்டுப் பாடியுள்ளனர்.
சுடிதார் படையிடம் ஈவ்டீசிங்கில் ஈடுபட்ட கோபி, சுந்தரவேல், செய்யது, அரிகிருஷ்ணன், ரவி ஆகிய 5 பேரும் அப்போதே கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது ஈவ்டீசிங் வழக்கு போடப்பட்டுள்ளது.
இந்த வேட்டை இன்னும் சில திங்களில் தீவிரப்படுத்தப்பட உள்ளதாக இணைக் கமிஷனர் தெரிவித்துள்ளார்.
ரோட் ரோமியோக்களே உஷார்....