8 நாட்களுக்கு பெட்ரோல், டீசல் ஸ்டாக் உள்ளது: எண்ணை நிறுவனங்கள்
சென்னை: சென்னைக்கு 8நாட்களுக்குத் தேவையான பெட்ரோல், டீசல் கையிருப்பில் உள்ளது. எனவே பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என மக்கள் அஞ்ச வேண்டாம் என எண்ணை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவன நிர்வாக இயக்குநர் ஜெயச்சந்திரன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவன நிர்வாக இயக்குநர் செளத்ரி, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவன நிர்வாக இயக்குநர் சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், பொதுமக்கள் பயப்படும் அளவுக்கு நிலை தற்போது இல்லை. சென்னைக்கும், புறநகர்ப் பகுதிகளுக்கும் தேவையான, 8 நாட்களுக்குத் தேவையான கையிருப்பு உள்ளது.
சென்னைக்கு ஒரு நாளைக்கு 2,085 கிலோ லிட்டர் பெட்ரோலும், 4,800 கிலோ லிட்டர் டீசலும் தேவை. தற்போது 3 நிறுவனங்களிடமும், 16,500 கிலோ லிட்டர் பெட்ரோலும், 24,000 கிலோ லிட்டர் டீசலும் கையில் உள்ளது.
வழக்கமாக 2 நாட்களுக்கு மட்டுமே கையிருப்பில் வைத்திருப்போம். தற்போது 8 நாட்களுக்கான இருப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் எந்த வகையிலும் அச்சப்படத் தேவையில்லை.
கொச்சியிலிருந்து கப்பலில் டீசல் வரவழைக்கப்பட்டுள்ளது. 6ம் தேதி வெளிநாட்டிலிருந்து ஒரு கப்பல் வரவுள்ளது. எனவே இனிமேல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற பிரச்சினையே வராது. அந்தப் பேச்சுக்கே இடமில்லை.
3 நிறுவனங்களும் இணைந்து பற்றாக்குறையை சரி செய்துள்ளோம். கடந்த சில நாட்களில் பெட்ரோலுக்கு பெரிய அளவில் தட்டுப்பாடு ஏற்படவில்லை. டீசலுக்குத்தான் சிக்கல் ஏற்பட்டது. அதற்கு காரணம் வர வேண்டிய கப்பல் தாமதமானதால்தான். மேலும் பலர் அதிக அளவிலான டீசலை வாங்கி ஸ்டாக் வைக்க ஆரம்பித்ததால் டீசலுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு விட்டது.
மேலும் பொதுமக்களிடையே ஏற்பட்ட பயம், கிளப்பப்பட்ட புரளிகள் போன்றவையும் இதற்கு இன்னொரு காரணம்.
அதிக விலை கொண்ட பெட்ரோல், டீசலை விற்க வேண்டும் என நாங்கள் யாரையும் கட்டுப்படுத்தவில்லை. கட்டாயப்படுத்தவில்லை. மக்களேதான் அவற்றை விரும்பி வாங்குகிறார்கள். நாங்களாக யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.
அதிக விலை கொண்ட பெட்ரோல், டீசலை மட்டுமே விற்கும் பெட்ரோல் நிலையங்களின் எண்ணிக்கையை நாங்கள் குறைத்துக் கொண்டு வருகிறோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
பெட்ரோல், டீசல் இனி தட்டுப்பாடு ஏற்படாது எண்ணை நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் கூறியிருப்பது மக்கள் மனதில் நிம்மதியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.












Click it and Unblock the Notifications