அணு ஒப்பந்தம் நல்லதுதான்: முலாயம் சிங்கிடம் கலாம் விளக்கம்!

அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் இடதுசாரிகள் ஆதரவை விலக்கிக் கொண்டால், காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவு தர சமாஜ்வாடிக் கட்சி தயாராகி வருகிறது.
இந்தப் பின்னணியில் நேற்று 3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை. மாறாக, ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மேலும் விளக்கம் அளிக்க வேண்டும், தேசிய அளவில் விவாதம் நடத்தப்பட வேண்டும், இதுகுறித்து அணு விஞ்ஞானி ஒருவரின் கருத்தை அறிவது என தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி கூட்டம் முடிந்ததும் முலாயம் சிங்யாதவ், அமர்சிங் ஆகியோர் டெல்லியில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவரும், அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாம் வீட்டுக்குச் சென்றனர். அங்கு கலாமை சந்தித்து அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஆலோசித்தனர்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. அதன் பின்னர் வெளியே வந்த முலாயம் சிங் யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்திய அணு சக்தி தொழில்நுட்பத்தின் தந்தையான, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மிகுந்த மரியாதைக்குரியவர்.
அவரிடம் அணு சக்தி ஒப்பந்தம் குறித்து ஆலோசனை கேட்டோம். அதற்கு அவர், தான் அணு சக்தி ஒப்பந்தத்தை முழுமையாக படித்துப் பார்த்ததாகவும், அது நாட்டு நலனுக்கு குந்தகம் விளைவிக்காது, நாட்டுக்கு நல்லது என்று தெரிய வந்ததாகவும் கூறினார்.
கலாம் சொன்னது என்ன?:
நான் அரசியலில் இல்லை. ஆனால் அணுசக்தித் தொழில்நுட்பத் துறையில் நீண்ட காலம் அனுபவம் உள்ளவன். அந்த அனுபவத்தில் நமது நாட்டுக்கு அணு சக்தி மிகவும் அவசியம். அதற்கு தேவையான யுரேனியம், தோரியம் போன்றவற்றை நாம் பெற வேண்டியதும் அவசியம்.
இந்தியா அணு சக்தி நாடு. எனவே அணு சக்தி எரிபொருள் வழங்கும் நாடுகள் அமைப்பில் நாம் உறுப்பினராக வேண்டும். அதில் அமெரிக்கா மட்டுமல்லாமல் 45 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. அந்த நாடுகளிடமிருந்து நாம் யுரேனியம், தோரியம் போன்றவற்றை பெற முடியும்.
நாம் தோரியம் எரிபொருளால் இயங்கும் அணு உலைகளை உருவாக்கி வருகிறோம். ஆனால், அதை கட்ட நமக்கு இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகள் ஆகலாம். அதுவரை நமக்கு யுரேனியம் தேவைப்படுகிறது. அதைப் பெற இந்த ஒப்பந்தம் அவசியம். அப்போதுதான் தடையில்லாமலும், சிக்கல் இல்லாமலும் நம்மால் யுரேனியத்தைப் பெற முடியும்.
தற்போது யுரேனிய பற்றாக்குறையால் நம்மால் முழு அளவில் அணு சக்தியைப் பயன்படுத்த முடியவில்லை. 30 முதல் 40 சதவீத மின் உற்பத்தியை மட்டுமே செய்ய முடிகிறது.
அதேசமயம், இந்த ஒப்பந்தத்தால் நமது அணு ஆயுதத் திட்டங்களுக்கு பாதிப்பு ஏதும் வராது. நமது அண்டை நாடுகள் அணு ஆயுதங்களைத் தயாரிக்கும்போது, நாம் மட்டும் அணு தொழில்நுட்பத்தால் மின் சக்தி மட்டுமே தயாரிப்போம் என்ற வரையறைக்குள் அடங்கி விடமுடியாது. அப்படி யாரும் நம்மை கட்டுப்படுத்திவிட முடியாது என்று தெரிவித்தார் கலாம்.
கலாமின் யோசனைகள் மற்றும் அறிவுரைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அவரது கருத்தை ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்களிடம் (மூன்றாவது அணி) தெரிவிப்போம். அதன் பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றார் முலாயம் சிங்.
கலாமின் கருத்தை மூன்றாவது அணி இதை ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் முலாயம் ஏற்றுக் கொண்டுவிட்டதால் மத்திய அரசுக்கு அவரது ஆதரவு கிடைக்கும் என்றே தெரிகிறது.
ஆனால், அவர் அதற்கு வேறு சில நிபந்தனைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மகளி்ர் இட ஒதுக்கீட்டு மசோதாவை கிடப்பில் போட வேண்டும், மத்திய அரசில் இந்தந்த அமைச்சர் பதவிகள் வேண்டும் என்பது தான் முக்கியமானவை.
அவர் போட்ட மற்ற நிபந்தனைகளான நிதியமைச்சர் ப.சிதம்பரம், பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா, ரிசர்வ் வங்கி கவர்னரை மாற்ற வேண்டும் ஆகியவை, முதல் இரண்டு நிபந்தனைகளை கட்டாயப்படுத்தவே எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications