For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முலாயம் இல்லை-செளதாலா: பிளவு இல்லை-நாயுடு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: முலாயம் சிங் யாதவ் எடுத்த முடிவால், 3வது அணியிலிருந்து அவரது சமாஜ்வாடி கட்சி தானாகவே வெளியேறி விட்டது. இப்போது அந்தக் கட்சி ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியில் இல்லை என்று முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் தலைவருமான ஓம் பிரகாஷ் செளதாலா கூறியுள்ளார். இதன் மூலம் 2வது முறையாக 3வது அணி உடைந்துள்ளது.

அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரஸ் பக்கம் சாய்ந்து விட்டது சமாஜ்வாடி கட்சி. இதற்கு முன்னோட்டமாக நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கையும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்திதுப் பேசினார்
முலாயம் சிங் யாதவ்.

காங்கிரஸுடன் உறவு கூடாது என்று தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு தீவிரமாக வலியுறுத்தி வந்தார். ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் பாதையில் நடக்க ஆரம்பித்து விட்டார் முலாயம் சிங்.

இந்த நிலையில் 3வது அணியில் தற்போது சமாஜ்வாடி கட்சி இல்லை என்று இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் தலைவரான முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் செளதாலா அறிவித்துள்ளார். இதன் மூலம் 3வது அணியில் பிளவு ஏற்பட்டிருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செளதாலா டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், முலாயம் சிங் எடுத்த முடிவால் (காங்கிரஸுக்கு ஆதரவு) அவர் தானாகவே கூட்டணியிலிருந்து விலகி விட்டார். அவரது கட்சியும் தற்போது
கூட்டணியில் இல்லை.

சமாஜ்வாடி கட்சி கூட்டணியில் இல்லாவிட்டாலும் கூட ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி வலுவாகவும், கட்டுக்கோப்பாகவும் உள்ளது. பாறை போல நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றார் செளதாலா.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்பு உருவானதுதான் 3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வீட்டில்தான் கூட்டணியின் பெயரும், கூட்டணியின் பிறப்பும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் தேர்தல் நாளன்றே கூட்டணி டமால் ஆனது. யாருக்கும் ஆதரவளிப்பதில்லை, தேர்தலைப் புறக்கணிப்பது என்ற முடிவை கூட்டணி தலைவர்கள் எடுத்திருந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்களை ஓட்டுப் போட வைத்து கூட்டணியிலிருந்து தானாகவே கழன்று கொண்டார் ஜெயலலிதா.

இப்போது கிட்டத்தட்ட அதே பாணியில் தன் வழி தனி வழி என்று கூறி முலாயம் சிங்கும் மூன்றாவது அணியிலிருந்து சத்தம் போடாமல் கழன்று கொண்டு விட்டார்.

இதன் மூலம் பிறந்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் 2வது முறையாக பிளந்துள்ளது 3வது அணி.

பிளவு இல்லை: நாயுடு

ஆனால், ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியில் பிளவு ஏதும் இல்லை. சமாஜ்வாடி கட்சி தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்று தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

'டேமேஜ் கன்ட்ரோலில்' இறங்கியுள்ள நாயுடு செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியில் பிளவு ஏதும் இல்லை. சமாஜ்வாடி கட்சிக்கு கூட்டணியில் இடமில்லை என்று செளதாலா ஒருபோதும் கூறவில்லை.

சமாஜ்வாடி கட்சி தனது நிலையை தெளிவுபடுத்த முன்வர வேண்டும்.

ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியின் நிலை குறித்து எங்களது அடுத்த கூட்டத்தில் தீர்மானித்து முறைப்படி அறிவிக்கப்படும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X