2 கோடி வன்னியர்களின் தளபதியை கைது செய்வதா?-ராமதாஸ்

வன்னியர் சங்கத் தலைவரும், பாமகவின் முக்கியப் பிரமுகருமான குரு கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை:
வன்னியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் குருவை காவல் துறையினர் அதிகாலை நேரத்தில் வீடு புகுந்து தூங்கிக்கொண்டிருந்தவரை தட்டி எழுப்பி கைது செய்திருக்கிறார்கள். ஊரில் அவர் இல்லாத நேரத்தில் நடந்ததாக ஒரு சம்பவத்தைச் சித்தரித்து அதில் அவரை இணைத்து பொய் புகார் கொடுக்க ச்செய்து, வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ள திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையைப் பாமக வன்மையாகக் கண்டிக்கிறது.
கைது செய்யப்பட்டால் உடனடியாக ஜாமீனில் விடக்கூடிய குற்றப்பிரிவின் கீழ் முதலில் புகார் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் பின்னர் கொலை முயற்சி புகார் சேர்க்கப்பட்டு வழக்கு ஜோடிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் குருவை ஜாமீனில் எளிதில் வரமுடியாத பிரிவுகளின் கீழ் கைது செய்திருக்கிறார்கள்.
தலைமறைவாக இருந்தவர் என்று சொல்லி, கைது செய்வதற்கான ஆணையை பெற்றிருக்கிறார்கள். மேலிடத்தின் நிர்பந்தத்தின் பேரில்தான் இத்தகைய பிரிவுகள் எல்லாம் கூடுதலாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.
சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் தினத்தில் குரு அவரது சொந்த ஊரில் இல்லை. வன்னியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்ற முறையிலும், பாமகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர் என்ற முறையிலும் நாள்தோறும் பல நிகழ்ச்சிகளில் குரு கலந்துகொண்டு வந்திருக்கிறார்.
கட்சியின் பொதுக்குழு, அரசியல் பயிற்சி முகாம் போன்ற நிகழ்வுகளில் பங்கேற்று வந்திருக்கிறார். கைது செய்யப்பட்டதற்கு முதல் நாளில் கூட கோயில் திருவிழா, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார்.
ஆனாலும் தலைமறைவாக இருந்தவர் என்ற பொய்யான தகவலை தெரிவித்து அவரை கைது செய்வதற்கான ஆணையை பெறும்படி உள்ளூர் காவல்துறையினரை மாவட்ட காவல்துறை நிர்வாகம் நிர்பந்தம் செய்திருக்கிறது.
இத்தகைய நடவடிக்கைகள் எல்லாம் திமுக அரசின் பழிவாங்கும் வெறியையே எடுத்துக்காட்டுகிறது. திமுக தலைவர் கருணாநிதி எப்போதெல்லாம் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருக்கிறாரோ அப்போதெல்லாம் வன்னியர் சங்கத்தின் தலைவர் குரு மீது பொய் புகார்களை பெற்று வழக்குப்போட்டு பழி வாங்குவது என்பது தொடர்ந்து நடந்து கொண்டு வந்துள்ளது.
அரசியல் பழிவாங்கல் என்பதற்கு மீண்டும் ஒருமுறை அர்த்தம் கண்டிருக்கிறார் முதல்வர்.
நள்ளிரவில் என்னை கைது செய்துவிட்டார்கள் என்று முன்பு அலறித் துடித்தவர் திமுக தலைவர். அப்போது அரசியலில் வேறு ஒரு அணியில் இருந்தாலும் ஓடோடி சென்று சிறையில் அவரை சந்தித்து அவருக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறேன்.
அதற்கெல்லாம் கைமாறாகத்தான் இப்போது 2 கோடி வன்னிய மக்களின் தளபதியாகவும், பாமக முன்னணித் தலைவராக விளங்கி வரும் குருவை அதே நள்ளிரவு பொழுதில் கைது செய்து அவரது வீட்டின் கதவை உடைத்து திறந்து சோதனை என்ற பெயரில் அராஜகத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள்.
பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை எல்லாம் கைது செய்து அவர்களது வீடுகளுக்குள்ளும் புகுந்து சோதனை என்ற பெயரில் காவல்துறையினர் வெறியாட்டம் போட்டிருக்கின்றனர்.
திமுக ஆட்சியின் இந்த அராஜக பழிவாங்கும் நடவடிக்கைகள் எல்லாம் ஒரு மினி எமர்ஜென்சி நிலையை நினைவுபடுத்துவதாக உள்ளது.
எதிர்வரிசையில் இருந்த போதெல்லாம் காவல் துறையின் அடக்குமுறை என்றும், பழிவாங்கும் நடவடிக்கை என்றும், ஜனநாயக படுகொலை என்றும் எதையெல்லாம் சொல்லி வந்தார்களோ அவற்றையெல்லாம் ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் திமுக அரங்கேற்றி வந்திருப்பதைத் தமிழகம் கண்டு வந்திருக்கிறது.
பொய்ப்புகாரின் பேரில் குரு கைது செய்யப்பட்டிருப்பதும் அவரைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பாமக முன்னணியினரை வேட்டையாடி கைது செய்து வருவதும், அவர்களது வீடுகளுக்குள் எல்லாம் புகுந்து சோதனை என்ற பெயரில் அராஜகத்தை நடத்தியிருப்பதும் திமுக அரசின் பழிவாங்கும் செயலையும், அதன் ஜனநாயக விரோதப் போக்கையும் எடுத்துக் காட்டுகின்றன.
பழிவாங்கல்...
ஜனநாயகத்துக்கு விரோதமான இந்த அராஜக பழிவாங்கும் நடவடிக்கைகளை ஜனநாயக சக்திகள் அனைத்தும் கண்டிக்க முன் வரவேண்டும்.
கைது நடவடிக்கைகளும், பழிவாங்கும் அடக்குமுறைகளும் பாமகவினருக்கு புதிதல்ல. ஆனாலும் திமுக அரசு மேற்கொண்டுள்ள இந்த வரலாறு காணாத அடக்குமுறையைக் கண்டு பாமகவினரின் உள்ளம் கொதிக்கத்தான் செய்யும்.
அதன் விளைவாக தங்களது எதிர்பார்ப்பையும் கண்டனத்தையும் வெளிப்படுத்த அவர்கள் துடிப்பது இயற்கை.
ஆனால் அத்தகைய எந்த சூழ்நிலையிலும் சட்டத்துக்கு விரோதமான வன்முறை நிகழ்வதற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த வகையிலும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது. சமூக விரோத சக்திகள் புகுந்து பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துவதற்கு சந்தர்ப்ப சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்துவிடக்கூடாது.
அமைதியான வழியில், அறவழியில் உண்ணாவிரதம், தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் போன்ற வழிமுறைகளை பின்பற்றி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தலாம். ஆனால் கண்டிப்பாக எங்கும் வன்முறை நிகழ்வுக்கு அவை வழிவகுத்து விடக்கூடாது என்பதில் பாமகவினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
குருவுக்கு எதிரான இந்த அடக்குமுறை பழிவாங்கும் நடவடிக்கைகளை முறியடிக்க அனைத்து சட்டப்பூர்வமான வழிகளில் பாமக ஈடுபடும். அதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன.
இவ்வாறு கூறியுள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications