பல்கலை.யாகும் கல்லூரிகளால் யாருக்கு லாபம்?: விஜய்காந்த்
சென்னை: 5 அரசு கல்லூரிகளையும் 2 தனியார் கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களாக மாற்றும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தால் இட ஒதுக்கீடு பாதிக்கப்படுவதோடு, கட்டணங்களும் கண்டபடி உயர்த்தப்படும் நிலை உருவாகியுள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த சட்டசபைக் கூட்டத் தொடர் முடியும் தருவாயில், உயர்க்கல்வித் துறையில் அவசர அவசரமாக இரண்டு சட்டங்களை அரசு கொண்டு வந்தது. 5 அரசு கல்லூரிகளை 4 பல்கலைக்கழகங்களாக மாற்றியமைக்க ஒரு சட்டமும்,
இரண்டு தனியார் கல்லூரிகளை தனித்தனியே இரு பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கு இரண்டாவது சட்டமும் கொண்டு வரப்பட்டது.
கல்லூரிகளாக இயங்கும் வரை அவை அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். பல்கலைக்கழகங்களாக மாறிவிட்டால் இட ஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. மாணவர்களிடம் பல வகையிலும் கட்டணங்களை உயர்த்தி வசூலிக்கலாம். ஆசிரியர்களை இஷ்டம்போல் வேலைக்கு வைக்கலாம் அல்லது நீக்கலாம். இவ்வளவு சுதந்திரம் உண்டு.
இந்த இரு தனியார் கல்லூரிகளும் பல்கலைக்கழகமாக மாறுவதன் விளைவாக அரசிடம் இருந்து 65 டாக்டர் சீட்களும், 940 இன்ஜினியர் சீட்களும் தனியாருக்கு இந்த ஆண்டே பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.
இதனால் யாருக்கு என்ன லாபம்?. யாருக்கும் பயன்பெறாத, தனிப்பட்ட முதலாளிகளுக்கு ஆதாயம் தரக்கூடிய, மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாதகமாக உள்ள இந்த இரு சட்டங்களையும் நிறைவேற்ற தமிழக அரசு ஆர்வம் காட்டுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழக அரசு இந்தச் சட்டங்களை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications