குரு கைதைக் கண்டித்து இன்றும் பாமகவினர் போராட்டம்
சென்னை: வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு கைதை கண்டித்து தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்றும் பல இடங்களில் போராட்டம் நடந்தது.
வன்னியர் சங்க தலைவரும், பாமக பொருளாளருமான காடுவெட்டி குரு நேற்று அதிகாலை ஜாமீனில் வெளி வர முடியாத வாரண்ட்டின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் பிற பகுதிகளிலும் பாமகவினர் போராட்டம் நடத்தினர்.
இன்றும் போராட்டம் தொடர்ந்தது. பெரம்பலூர் காந்தி சிலை அருகே பாமக மாநில துணை பொதுச் செயலாளர் செழியன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோன்று அரியலூரில் தாலுகா அலுவலகம் முன்பு பாமக மாநில சமூக பாதுகாப்பு குழு தலைவர் பாலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனிடையே, பெரம்பலூர் மாவட்டம் சோமண்டன்புதூர் என்ற கிராமத்தில் சாலையோரம் உள்ள புளியமரத்திற்கு ஒரு கும்பல் நேற்றிரவு தீவைத்தது. இதில் மரத்தின் ஒரு பகுதி எரிந்து போனது. இச்சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜெயங்கொண்டத்தில் இன்று கடையடைப்பு நடத்தப்பட்டது. நகரில் உள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. இன்று ஞாயிற்றுக்கிழை என்பதால் பெரும்பாலான கடைகள் வழக்கமாக மூடப்பட்டிருந்தன. திறந்திருந்த சில கடைகளையும் பாமகவினர் மூடச் சொன்னதால் அவர்கள் மூடி விட்டனர்.
காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் முன்பு செங்கல்பட்டு எம்எல்ஏ திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
--












Click it and Unblock the Notifications