சச்சினுக்கு 'பெப்சி' டாட்டா - இளம் வீரர்களுக்கு குறி!
டெல்லி: செளரவ் கங்குலி, ராகுல் டிராவிட் ஆகியோரைத் தொடர்ந்து நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கருடனான தனது ஒப்பந்தத்தை பெப்சி குளிர்பான நிறுவனம் முடித்துக் கொண்டு விட்டது.
உலகளாவிய அளவில் முன்னணியில் உள்ள பெப்சி நிறுவனம் இந்தியாவின் புகழ் பெற்ற பிரபலங்களை, குறிப்பாக கிரிக்கெட் வீரர்களை தனது பிராண்ட் அம்பாசடர்களாக வைத்திருந்தது.
இந்திய கிரிக்கெட்டின் மும்மூர்த்திகள் என வர்ணிக்கப்படும் கங்குலி, சச்சின், டிராவிட் ஆகியோர் பெப்சியின் பிராண்ட் அம்பாசடர்களாக பல காலமாக இருந்து வந்தனர்.
ஆனால் சமீபகாலமாக இவர்களின் மார்க்கெட் படு வேகமாக குறையத் தொடங்கியதையடுத்து இவர்களை கழற்றி விட பெப்சி தீர்மானித்தது. முதல் கட்டமாக கங்குலி மற்றும் டிராவிடுக்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் கல்தா கொடுத்தது பெப்சி. தற்போது டெண்டுல்கருக்கும் டாட்டா காட்டி விட்டது.
பெப்சிக்கும், சச்சினுக்கும் இடையே நீண்ட காலமாக இருந்து வந்த பிராண்ட் அம்பாசடர் ஒப்பந்தம் மே மாதத்துடன் முடிவடைந்தது. தற்போது அதை பெப்சி புதுப்பிக்காமல்அப்படியே விட்டு விட்டது. இதன் மூலம் பெப்சிக்கும், சச்சினுக்கும் இடையிலான நீண்ட கால உறவு முடிவுக்கு வந்துள்ளது.
சச்சினை நீக்கியதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது அவர் அதிக அளவிலான தொகையை கேட்டதுதானாம்.
தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி, ஒரு பிராண்டை, ஒரு வருடத்திற்கு பிரபலப்படுத்த சச்சின் ரூ. 3 முதல் 4 கோடி வரை வாங்குகிறாராம். அவரது தலைமுறை வீரர்களில் இதுவே அதிகமான தொகையாகும்.
சச்சின் நீக்கம் குறித்து பெப்சி தரப்பில் யாரும் விளக்கம் அளிக்க முன்வரவில்லை. அதேபோல சச்சின் தரப்பிலும் அவரது மேனேஜரான வோர்ல்ட் ஸ்போர்ட் குரூப்பும் இதுகுறித்து விளக்கம் அளிக்க மறுத்து விட்டது.
இனிமேல் இளம் தலைமுறை வீரர்கள் மீது தனது கவனத்தை செலுத்த பெப்சி தீர்மானித்துள்ளதாம். இதற்காக, பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா மற்றும் ரோகித் சர்மா ஆகியோரை அது புதிய பிராண்ட் அம்பாசடர்களாக நியமித்துள்ளது. கங்குலி, டிராவிடுக்குப் பதில் இவர்கள் இடம் பிடித்துள்ளனர்.
இளைய தலைமுறையினரை கவருவற்காக 'Yeh hai Youngistaan Meri Jaan' என்ற பிரசார வாசகத்தையும் அது உருவாக்கியுள்ளது.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக பெப்சியுடன் இணைந்திருந்தார் சச்சின். சூப்பர் ஸ்டார்களான அமிதாப் பச்சன், ஷாருக்கான் உள்ளிட்டோருடன் இணைந்து பல விளம்பரங்களில் தோன்றியுள்ளார். இவர்கள் இடம் பெற்ற விளம்பரங்கள், 'தில் மாங்கே மோர்' என்ற வாசகத்துடன் படு பிரபலமானது.
ஆனால் சமீப காலமாக சச்சினின் ஆட்டம் பிரகாசிக்கவில்லை. அடிக்கடி காயமுற்று அணியில் இடம் பெறாமல் இருப்பதும், சரியாக விளையாடாமல் இருப்பதும் பெப்சிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுவும் சச்சின் குறித்த முடிவை பெப்சி மறு பரிசீலனை செய்ய முக்கிய காரணம்.
இனி வரும் நாட்களில் டோணி தலைமையில் புதிய பிராண்ட் அம்பாசடர்கள் குழுவை பெப்சி உருவாக்கும் எனத் தெரிகிறது.
சச்சினை பெப்சி கழற்றி விட்டிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு 'கோக்' அடித்து டென்ஷனைக் குறைச்சுக்க வேண்டியதுதான்!












Click it and Unblock the Notifications