ஜெ. திரும்புவது எப்போது? உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை: கொடநாடு எஸ்டேட்டில் ஓய்வில் இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சென்னைக்கு எப்போது திரும்புவார் என்பதை தெரிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
முழுமையான இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், மாவட்ட கண்காணிப்பு அந்தஸ்துக்கு குறையாத ஒரு போலீஸ் அதிகாரி ஜெயலலிதாவை அவரது வீட்டில் நேரில் சந்தித்து பாதுகாப்பு ஏற்பாடு குறித்து கருத்துக்களை கேட்டறிந்து, அதை 2 வார காலத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
அந்த அதிகாரி அளிக்கும் அறிக்கையில் அடிப்படையில், தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் பிரிவு கண்காணிப்பு அதிகாரி துரைகுமார் இதற்காக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதாவை சந்தித்து பேச அவர் அனுமதி கேட்டிருந்தார். இம்மாதம் 2-ம் தேதி 4 மணி அளவில் கொடநாட்டில் தங்கியிருக்கும் ஜெயலலிதாவை சந்தித்து பேச அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டது.
ஆனால், பாதுகாப்பு அதிகாரி கொடநாடு சென்று ஜெயலலிதாவை சந்திக்க முடியாது என்று மறுத்து விட்டார். ஜெயலலிதாவை அவரது வீட்டில் தான் சந்தித்து பாதுகாப்பு ஏற்பாடு குறித்து கருத்து கேட்டறிய வேண்டும் என்று தான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன், கடந்த வியாழக்கிழமை அன்று உயர்நீதிமன்றத்தில் இந்த பிரச்சனையை எழுப்பினார். ஜெயலலிதாவை கொடநாட்டில் சந்தித்து பேச காவல்துறை அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும் என்றும், நீதிமன்றம் பிறப்பித்த காலக் கெடு முடிந்து விட்டது என்றும் அவர் கூறினார்.
இந்த வழக்கு விசாரணை நேற்றைக்கு ஒத்திவைக்கப் பட்டிருந்தது. மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணந் வாதிடுகையில்,
கொடநாட்டில் தங்கியிருக்கும் ஜெயலலிதாவுக்கு அங்கும் பாதுகாப்பு தொடர்பாக அச்சுறுத்தல் உள்ளது. கொடநாடு பஞ்சாயத்து தலைவர் சந்தோஷ், கொடநாட்டு எஸ்டேட்டில் காரை வேகமாக ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாக்கி இருக்கிறார். இது தொடர்பாக அவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, ஜெயலலிதா தங்கி இருக்கும் கொடநாடு எஸ்டேட்டுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும். அங்கும் பாதுகாப்பை ஆராய்ந்து அறிக்கை தர உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஜெயலலிதாவை வீட்டில் நேரடியாக சந்தித்து கருத்து கேட்க வேண்டும் என்று தான் உத்தரவிடப்பட்டது. அதில் கொடநாடு சென்று கருத்து கேட்கும்படி சொல்லவில்லை என்றார்.
அதற்கு நவநீதகிருஷ்ணன், கொடநாட்டிலும் ஜெயலலிதாவுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்றார்.
அதைக்க கேட்ட நீதிபதி, ஜெயலலிதா எப்போது சென்னை திரும்புவார்? அந்த தகவலை கேட்டு நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும். இதில் அரசு தரப்பு வாதத்தையும் கேட்கவேண்டி உள்ளது என்றார்.
இதையடுத்து அரசு சிறப்பு வழக்கறிஞர் சீனிவாசன், இந்த வழக்கில் அட்வகேட் ஜெனரல் வாதிடவேண்டி இருப்பதால் காலஅவகாசம் தேவை என்று கோரினார்.
இதையடுத்து புதன்கிழமை வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications