அரசை வீழ்த்த பாஜகவுடன் இடதுசாரிகள் பேச்சு?
டெல்லி: காங்கிரஸ் அரசுக்கு எதிராக இணைந்து செயல்படுவது குறித்த சாத்தியக் கூறுகள் தொடர்பாக பாஜகவுடன், இடதுசாரிகள் பேச்சு நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 3வது கட்சி ஒன்றின் உதவியுடன் இந்தப் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இடதுசாரிகளின் ஆதரவு வாபஸைத் தொடர்ந்து எழுந்துள்ள அரசியல் நிலவரத்தின் அடுத்த கட்டமாக, குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை பிரதமர் மன்மோகன் சிங் இன்று சந்திக்கிறார்.
அப்போது நம்பிக்ைக வாக்கெடுப்புக்கு தனது அரசு தயாராக இருப்பதாக குடியரசுத் தலைவரிடம் தெரிவிக்கப் போகிறார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால் அரசைக் காக்கத் தேவையான ஆதரவை காங்கிரஸ் கட்சி திரட்டி வருகிறது.
ஆனால் மறுபக்கம், எப்படியாவது அரசை வீழ்த்த வேண்டும் என்ற வேகத்தில் இடதுசாரிகளும், பாஜகவும் தனித்தனியாக இயங்கி வருகின்றனர். தற்போது இரு தரப்பும் நெருங்கி வரத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும், இடதுசாரி கூட்டணியிலும் இடம் பெறாத ஒரு முக்கிய கட்சியின் முயற்சியால் பாஜகவுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையே பேச்சு தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.
இந்த பேச்சுக்களில் இரண்டு விஷயங்கள் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம். ஒன்று, யார் அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருவது, இரண்டாவது, மன்மோகன்சிங் அரசு நம்பிக்கை வாக்கு கோரினால் இணைந்து செயல்படுவது எப்படி என்பதுகுறித்து இருதரப்புக்கும் இடையே முக்கிய பேச்சு நடந்து வருவதாக தெரிகிறது.
இதுதவிர அரசுக்கு எதிரான கட்சிகளை திரட்டவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிகிறது.
பாஜகவுடன், இடதுசாரிகள் பேச்சு நடத்தி வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் டெல்லி அரசியல் சூட்டை மேலும் அனலாக்கியுள்ளன.












Click it and Unblock the Notifications