சோம்நாத் பதவி விலக மாட்டார்?
டெல்லி: தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே ஊகச் செய்திகளால் அவரது பதவிக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என சபாநாயகர் அலுவலகம் அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டுள்ளது.
மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் வாபஸ் பெற்றுள்ளதால், சோம்நாத் சாட்டர்ஜியும் விரைவில் பதவியை ராஜினாமா செய்வார் அல்லது அவரை பதவியிலிருந்து விலக நெருக்கடி தரப்படும் என செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து சோம்நாத் சாட்டர்ஜியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார். நான்தான் இன்னும் சபாநாயகர் என்று மட்டும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சபாநாயகர் அலுவலகம் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக எந்த ஒரு முடிவையும் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி எடுக்கவில்லை.
எனவே இதுதொடர்பாக ஊகமாகவோ அல்லது சர்ச்சைக்குரியதாகவோ செய்திகள் வெளியிட்டு, நாட்டின் உயர்ந்த பதவிகளில் ஒன்றான சபாநாயகர் பதவிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம்.
சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி எந்த அரசியல் கட்சியையும் சாராதவர். அவரது கடமைகளையும், பணிகளையும் சீரிய முறையில் கவனித்து வருகிறார். அதில்தான் அவரது கவனம் உள்ளது.
தற்போதைய சபாநாயகர் தேர்தல் எப்படி நடந்தது என்பதை அனைவரும் அறிவர். அது ஒருமனதான தேர்தல் மட்டுமல்லாமல், அனைத்துக் கட்சிகளும் இணைந்து சபாநாயகரை தேர்ந்தெடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
எந்தக் கட்சியின் சார்பிலும் வேட்பாளராக அவர் போட்டியிடவில்லை, தேர்ந்தெடுக்கப்படவும் இல்லை.
சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் எந்த அரசியல் கட்சி தொடர்பான விவகாரங்களிலும் சோம்நாத் சாட்டர்ஜி தொடர்பு கொண்டிருக்கவில்லை. அரசியலிலிருந்து அவர் ஒதுங்கியிருக்கிறார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சோம்நாத் பதவி விலக மாட்டார் என்றே கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications