பின்னோக்கி 7 கி.மீ. ஓடிய முத்து நகர் எக்ஸ்பிரஸ்!

சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல எழும்பூரிலிருந்து கிளம்பியது. நேற்று அதிகாலையில், திருச்சியைத் தாண்டி பூங்கொடி என்ற ரயில் நிலையத்திற்கு அருகே ரயில் வந்த போது திடீரென என்ஜினில் பழுது ஏற்பட்டது. இதனால் தொடர்ந்து ரயில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து ரயிலை நிறுத்தி விட்டு அதன் என்ஜின் டிரைவர், உதவி டிரைவர், கார்டு ஆகியோர் பூங்கொடி ரயில் நிலையத்திற்கு வந்தனர். அங்கு வந்து மாற்று என்ஜினை அனுப்பி வைக்குமாறு அதிகாரிகளுக்குத் தகவல் தந்து விட்டு வெளியே வந்தனர். அப்போது நிறுத்தி வைத்த ரயிலைக் காணவில்லை.
அதிர்ச்சி அடைந்த அவர்கள் ரயில் எங்கே போனது என்று பார்த்தபோது, ரயில் பின்னோக்கி போயிருந்தது தெரிய வந்தது.
ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடம் தாழ்வான பகுதி என்பதால் பின்னோக்கி நகரத் தொடங்கி கிட்டத்தட்ட 7 கிலோமீட்டர் தொலைவுக்குப் போய் விட்டது. அதாவது திருச்சி அருகே வரை போய் விட்டது. அங்குள்ள மேம்பாலம் ஒன்றின் மீது ரயில் வந்தபோது அது மேடான பகுதி என்பதால் அதற்கு மேல் போகாமல் அப்படியே நின்றுள்ளது.
ரயில் பின்னோக்கி போனது தெரியாமல் பயணிகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக பின்னால் எந்த ரயிலும் வரவில்லை. வந்திருந்தால் பேராபத்து ஏற்பட்டிருக்கும்.
உடனடியாக மாற்று என்ஜின் கொண்டு வந்து மாட்டி, திண்டுக்கல்லுக்கு ரயில் புறப்பட்டுச் சென்றது.
இந்தக் குழப்பம் காரணமாக அனந்தபுரி, பொதிகை, நெல்லை, பாண்டியன் ஆகிய ரயில்கள் கால தாமதமாகின.
ரயில் பின்னோக்கிச் சென்ற விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications