இந்திய கிரிக்கெட் அணி இலங்கை செல்லக் கூடாது: சரத்குமார்
சென்னை: இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு டெஸ்ட் தொடரில் பங்கேற்காமல் தடுக்க வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகில் ஆறுகாட்டுத்துறை என்னும் மீனவ கிராமத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில், நாராயணசாமி, வாசகன் என்ற இரண்டு மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்திருக்கும் செய்தி வேதனையில் நெஞ்சைப் பிளப்பதாக இருக்கிறது.
இலங்கை தாக்குதலும், தமிழக மீனவர்கள் அதற்கு பலியாவதும் தொடர்கதையாகி இருக்கும் நிலையில், இந்தியர்களின் குறிப்பாக தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல் நடந்து கொள்ளும் இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
பாக் ஜலசந்தி மீன்வளம் நிறைந்த பகுதி, வேதாரண்யம் முதல் ராமேஸ்வரம் வரை உள்ள மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு இந்தப் பகுதியைத் தான் பயன்படுத்த முடியும். இந்தப் பகுதியில் இலங்கை கடற்படையினரின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
இலங்கை கடற்படையினரின் அட்டூழியங்களை இனியும் நாம் பொறுத்துக் கொள்ள முடியாது. பாக் ஜலசந்தி முழுவதும், தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமையை இந்திய அரசு பெற்றுத்தர வேண்டும். தமிழக முதல்வர் அறிக்கையும், கடிதமும் மட்டும் அனுப்பிக் கொண்டு இருக்காமல், உடனே டெல்லிக்கு விரைந்து சென்று பிரதம மந்திரியை சந்தித்து மீனவர்களை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தரைமேல் பிறந்து, கடல் தண்ணீரில் வாழ்ந்து அன்றாடம் உயிரை பணயம் வைத்து தொழில் செய்யும் மீனவ நண்பர்களின் உயிரைப் பறிக்கும் இலங்கை கடற்படையையும், இத்தகைய கொடும் செயல்களை கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் இலங்கை அரசையும், இந்தியா வன்மையாக கண்டிக்க வேண்டும்.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு விளையாட செல்வதை உடனடியாக தடுக்க வேண்டும். தமிழன் என்றால் நாதியற்றவனா? தமிழனுக்கு தமிழ்நாட்டில் பாதிப்பு என்றால் மத்திய அரசு மௌனத்தை தான் கடைப்பிடிக்குமா?
எனவே மீனவர்கள் உயிரோடும் உடைமைகளோடும் விளையாடி கொலை வெறித்தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையையும், இலங்கை அரசையும், உடனடியாக கண்டித்து இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்தாவிட்டால் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மத்திய அரசைக் கண்டித்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications