மீனவர்கள் பிரச்சினையில் கருணாநிதி மெத்தனம்: ஜெ. கண்டனம்
சென்னை: இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலிலிருந்து தமிழக மீனவர்களைக் காக்க முதல்வர் என்ற முறையில் கருணாநிதி உரிய நடவடிக்ைககளை எடுக்காமல் மெத்தனமாக இருப்பது கண்டனத்துக்குரியது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகை மாவட்ட மீனவர்கள் இருவர் நேற்று இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இன்னொரு மீனவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவத்தால் மீனவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீட்டுத் தொகையை மாநில அரசு வழங்க வேண்டும். இதுதவிர காயமடைந்த மீனவர்களுக்கு நல்ல மருத்துவ சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
கடந்த 2 ஆண்டு கால திமுகஆட்சியில் விவசாய வளர்ச்சி வீழ்ந்து விட்டது. தொழில் வளர்ச்சி ஆட்டம் கண்டுள்ளது. கைத்தறி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சோகத்தோடு தற்போது மீனவர்களின் சோகமும் சேர்ந்து கொண்டுள்ளது.
இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களைத் தாக்கி வருகின்றனர். ஆனால் அனைத்துத் தரப்பினரின் பிரச்சினைகளையும் தீர்க்க முன்வராமல் சுயநலப் போக்குடன் கருணாநிதி நடந்து கொள்கிறார். இப்போது அவரது மெத்தனத்தால், மீனவர்களும் தங்களது வாழ்வுரிமைக்காக போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு கண்டு, அவர்களது பாதுகாப்புக்கு உத்தரவாதம் தர வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காது என்ற உத்தரவாதத்தினை இலங்கை அரசிடமிருந்து பெறுமாறு இந்திய அரசை கருணாநிதி நிர்ப்பந்தப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications