தமாகா என்றெல்லாம் இனி எதுவும் கிடையாது: தங்கபாலு
சென்னை: தமிழகத்தில் தமாகா கிடையாது. சோனியா காந்தியின் நியமனத்தை எதிர்ப்பவர்கள் உண்மையான காங்கிரஸாரே கிடையாது என்று ஜி.கே.வாசன் ஆதரவாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள கே.வி. தங்கபாலு.
தமிழக காங்கிரஸ் தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற தங்கபாலு இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் வலுப்படுத்துவோம். ஒரு சில இடங்களில் காங்கிரஸ் கொடி இறக்கப்பட்டு, தமாகா கொடி ஏற்றப்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் தமாகா என்ற அமைப்பு கிடையாது.
மூப்பனாருக்கு பிறகு அந்த கட்சி காங்கிரசுடன் இணைந்து விட்டது. மூப்பனாரும், நானும் இரட்டை குழல் துப்பாக்கிகளாக இணைந்து செயல்பட்டோம். நானும், வாசனும் அதுபோல் இணைந்து செயல்படுகிறோம்.
வாசன் தமாகா பற்றி எதுவும் கூறவில்லை. யாரோ சிலர் கூறுவது பற்றி கவலைப்பட வேண்டாம். சோனியாவை எதிர்ப்பவர்கள் உண்மையான காங்கிரஸ்காரர்கள் அல்ல.
நாளை மறுநாள் பெருந்தலைவர் காமராஜர் 106வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. காமராஜரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட உள்ளது.
அன்று மாலை நடைபெறும் சிறப்பு விழாவில், மேலிட பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், இளங்கோவன், ஜி.கே.வாசன் மற்றும் ஜெயந்தி நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
சிங்கள ராணுவம் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவது கண்டனத்துக்கு உரியது. இந்திய எல்லைக்குள் வர இலங்கை கடற்படைக்கு அதிகாரம் இல்லை.
இதுபோன்ற சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்கும் வகையில், கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
இதுகுறித்து நான் ஏற்கனவே பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு கடிதங்கள் எழுதியுள்ளேன்.
அடுத்த முறை நான்டெல்லி செல்லும் போது தனிப்பட்ட முறையில் பிரதமர் மற்றும் பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து இதுகுறித்து விவாதிக்கவுள்ளேன்.
காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமையும் என்று பாமக தலைவர் ராமதாஸ் சொல்லியிருப்பது காங்கிரஸ் மீது அவர் கொண்டுள்ள நல்லெண்ணத்தை காட்டுகிறது. பாமக மத்தியில் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications