ராஜபக்சே கொடும்பாவியை எரித்து வக்கீல்கள் போராட்டம்
சென்னை: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலைக் கண்டித்து, சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் இன்று இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கொடும்பாவியை எரித்து போராட்டம் நடத்தினர்.
இன்று காலை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவக்கீல்கள், உயர்நீதிமன்றம் அமைந்துள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையில் கூடினர். தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்லும் இலங்கை கடற்படைக்கும், இலங்கை அரசுக்கும் எதிராக கோஷம் எழுப்பினர். பின்னர் ராஜபக்சேவின் கொடும்பாவியை தீவைத்து எரித்தனர்.
இதையடுத்து போலீஸார் கொடும்பாவியை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களை வக்கீல்கள் தடுத்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸார் கொண்டு வந்த தண்ணீரையும் தூக்கி தூர வீசினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இருப்பினும் கொடும்பாவிைய அணைக்க விடாமல் வக்கீல்கள், போலீஸாரை தடுத்து நிறுத்தியதால் கொடும்பாவி முழுமையாக எரிந்து சாம்பலானது. அதன் பிறகே வக்கீல்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தால், என்.எஸ்.சி. போஸ் சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.