மீனவர்கள் ஸ்டிரைக் எதிரொலி: மீன் விலை கிடு கிடு உயர்வு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கடந்த 10 நாட்களாக மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக ராமேஸ்வரம் மற்றும் தென் மாவட்டங்களில் மீன் விலை அதிகஅளவில் உயர்ந்துள்ளது.
இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலைக் கண்டித்து ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஸ்டிரைக் தொடங்கி இன்றுடன் 10 நாட்களாகிறது.
இதன்காரணமாக முக்கிய மீன் பிடி மையமான ராமேஸ்வரத்தில் மீன் பிடி தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கட்டுமரங்களைக் கொண்டு சில மீனவர்கள் பிடித்து வரும் மீன் போதிய அளவில் இல்லாததால் மீன் தட்டுப்பாடு விஸ்வரூபம் எடுத்துள்ளது.
வஞ்சிரம், இறால் உள்ளிட்ட விலை அதிகமான மீன்கள் சுத்தமாக வரத்து இல்லை. இதனால் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மார்க்கெட்டுக்கும் போதிய அளவில் மீன் வரத்து இல்லை.
ராமேஸ்வரத்தில் உள்ள ஐந்து மீன் ஏற்றுமதி நிறுவனங்கள் மூடிக் கிடக்கின்றன. ராமேஸ்வரத்தில் மட்டுமல்லாது தென் மாவட்டங்களிலும் மீன் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. குறைந்த அளவிலான மீன்களே விற்பனைக்கு வருவதால் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
மீனவர்களின் போராட்டம் குறித்து தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர் சம்மேளன பொதுச் செயலாளர் என்.ஜே.போஸ் கூறுகையில், ஜூலை 16ம் தேதி சென்னைக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு பல்வேறு மீனவர் சங்கங்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில்தான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.