சென்னையை மிரட்டும் மர்ம கொலைகள் - இன்றும் ஒருவர் பலி
சென்னை: சென்னை வட பழனியை தொடர் கொலைகள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இன்று மேற்கு மாம்பலம் பகுதியில், பாதி எரிந்த நிலையில் இளைஞர் ஒருவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
சென்னை வட பழனியில் அடுத்தடுத்து கொலைகள் நடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. சைக்கோ மனிதனின் செயல் என இது சந்தேகிக்கப்படுகிறது.
இந்த நிலையில் மேற்கு மாம்பலத்தில், பழைய பேப்பர், குப்பை சேகரிக்கும் இளைஞர் ஒருவர் பாதி எரிந்த நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
மேற்கு மாம்பலம் கோவிந்தன் தெருவில் நடைபாதையில் தூங்கிய வாலிபர் ஒருவர் தீயில் எரிந்து கருகிய நிலையில் இறந்து கிடந்தார். உடலின் பல பகுதிகள் எரிந்து விட்ட நிலையில் தலைப் பகுதியில் தீ எரிந்து கொண்டிருந்ததது.
அதிகாலை 4.30 மணியளவில் இந்த கொடூர காட்சியைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் குமரன் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயில் கருகிய ஆசாமியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார்.
இறந்தவர் பழைய பேப்பர், குப்பை, பாட்டில்கள் சேகரிப்பவர் என்று தெரிய வந்துள்ளது. அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. இதற்கும் சைக்கோ மனிதனே காரணமாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
சென்னையை அதிர்ச்சிக்குள்ளாக்கி வரும் இந்த மர்ம சாவுகளால் மக்கள் பெரும் பீதியும், பதட்டமும் அடைந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆணையர் சேகர், இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு தீவிர நடவடிக்கை எடுக்க உள்ளோம். இனியும் இது போன்ற மர்மச் சாவுகள் நடப்பதற்கு போலீசார் ஒரு முடிவு கட்டுவார்கள் என்றார்.
--












Click it and Unblock the Notifications