ஈரானை தாக்கினால் கடும் விளைவுகள்-இந்தியா
டெல்லி: ஈரான் மீது ராணுவ பலத்தைப் பிரயோகிப்பதை இந்தியா விரும்பாது, ஆதரிக்காது. அப்படி நடந்தால் அது ஏற்றுக் கொள்ள முடியாத நடத்தையாகும் என்று மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சர்னா கூறியுள்ளார்.
ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவும், இஸ்ரேலும் தயாராகி வருகின்றன. இஸ்ரேலுடன் இணைந்து ஈரானைத் தாக்க அதிபர் புஷ் முடிவெடுத்துள்ளார். ஆனால் ஈரானை நோக்கி எந்தக் கையாவது திரும்பினால் அந்தக் கை முறிக்கப்படும் என ஈரான் அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் பதட்டம் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் ஈரான் மீதான தாக்குதல் திட்டம் குறித்து கருத்து தெரிவித்த சர்னா, ஈரான் மீதான தாக்குதல் இப்பிராந்தியத்தில் பல கடும் விளைவுகளை ஏற்படுத்தும். ஈரான் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நாடுகள் பொறுமை காக்க வேண்டும்.
எந்தப் பிரச்சினைக்கும் ராணுவத் தீர்வு சரியாகாது. சர்வதேச சமுதாயமும், ஈரானும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் ராணுவத் தாக்குதல் சரியான செயலாக அமையாது. அது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு சர்வதேச நடத்தையாகவே இருக்கும்.
ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படப் போவதாக வெளியாகும் செய்திகள் இந்தியாவுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. இப்படிப்பட்ட நடவடிக்கையை இந்தியா ஒருபோதும் ஏற்பதில்லை. இதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
தூதரக ரீதியிலும், பேச்சுவார்த்தை மூலமுமே பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற கருத்தில் இந்தியா உள்ளது. படை பலத்தாலோ, மிரட்டலாலோ எதையும் சாதிக்க முடியாது.
ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது ஈரானை மட்டுமல்லாது, இந்த பிராந்தியத்தையே ஒட்டுமொத்தமாக பாதிக்கும். வளைகுடா நாடுகளில் வசித்து வரும் 50 லட்சம் இந்தியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும். உலகப் பொருளாதாரம் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
எனவே சம்பந்தப்பட்ட நாடுகள் ராணுவ நடவடிக்கையை கைவிட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு முயல வேண்டும். அமைதிப் பாதையில் நடைபோட முன்வர வேண்டும் என்றார் சர்னா.