மத்திய அரசுக்கு எதிராக ஓட்டு-அகாலிதளம்
பாஜக கூட்டணியில் உள்ள இந்தக் கட்சி இத்தனை நாட்களாக தனது முடிவை அறிவிக்காமல் இருந்து வந்தது. சீக்கியரான பிரதமர் மன்மோகன் சி்ங்கின் ஆட்சியை கவிழ்க்க சீக்கிய கட்சியான அகாலிதளம் துணை போகக் கூடாது என காங்கிரஸ் தரப்பில் பேச்சு நடத்தப்பட்டு வந்தது.
ஆனால், வரும் 22ம் தேதி நாடாளுமன்றத்தில் நடக்கவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசை எதிர்த்தே வாக்களிப்போம் என அக் கட்சியின் தலைவரான பிரகாஷ் சிங் பாதல் இன்று அறிவித்துவிட்டார்.
அவர் கூறுகையில், பிரதமர் நல்லவர் தான், சிறந்த நிர்வாகி தான். ஆனால், அவர் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சி எப்போதும் பஞ்சாபின் நலன்களை புறக்கணித்தே வந்துள்ளது. பஞ்சாபுக்கு காங்கிரஸ் செய்த கெடுதல்களை யாரும் மறந்துவிட முடியாது.
அணு ஒப்பந்தம் ஒரு பக்கம் இருக்கட்டும், விலைவாசி உயர்வும் வேலைவாய்ப்பின்மையும் தலைவிரித்தாடுவதை மத்திய அரசு மறைக்க முடியாது.
பிரதமர் எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர், நாங்கள் எங்கள் சமூக நலனை எப்போதும் பின் தள்ள மாட்டோம். ஆனால், சிரோமணி அகாலிதளம் ஒரு மதசார்பில்லாத கட்சி. இதனால் பிரதமர் சீக்கியர் என்ற ஒரே காரணத்துக்காக எல்லாம் அவரை ஆதரிக்க முடியாது.
எங்களுக்கும் சோனியா காந்திக்கும் இடையிலான அரசியல் உறவு தண்ணீருக்கும் நெருப்புக்கும் இடையிலான உறவு மாதிரி. இதில் கெடுக்கல் வாங்கலுக்கு இடமே இல்லை.
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நிச்சயம் எதிர்த்தே வாக்களிப்போம். நடுநிலை எல்லாம் வகிக்க மாட்டோம். நடுநிலை வகிப்பது என்பது போரில் இருந்து ஓடுவது மாதிரி தான்.
அணு ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு முன் அனைத்துக் கட்சிகளுடனும் பேசி ஒருமித்த கருத்தை எட்டியிருக்க வேண்டும். அந்த ஒப்பந்தத்தில் ஏதோ குறை இருப்பதால் தான் இடதுசாரிகள் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர் என்றார் பாதல்.