சமாஜ்வாடி எம்பிக்களுக்கு ரூ. 30 கோடி-மாயாவதி பேரம்?
டெல்லி: மத்திய அரசைக் கவிழ்க்க பகுஜன் சமாஜ் கட்சியும் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது. அந்தக் கட்சியின் தலைவரும் உத்தரப் பிரதேச முதல்வருமான மாயாவதி சமாஜ்வாடி கட்சி எம்பிக்களுக்கு ரூ. 30 கோடி வரை பணம் தருவதாக பேரம் பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் பகுஜன் சமாஜ் தனக்கு ரூ. 30 கோடி தர முன் வந்ததாக ஒரு சமாஜ்வாடி எம்பியும் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் நிருபர்களிடம் கூறுகையில்,
பாஜகவும் பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து என்னை ஒழித்து கட்ட முயல்கின்றன. பிரதமராகும் கனவில் இருக்கும் அத்வானி, முதலில் அதற்கான தகுதியை பெற முயற்சிக்க வேண்டும்.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக டாக்டர் அப்துல் கலாமை நாங்கள் சந்தித்ததையும் பாஜக விமர்சித்துள்ளது. நம்பிக்கைக்கு உரியவர் யார்?. அப்துல் கலாமா அல்லது பாஜக தலைவர்களா? அப்துல் கலாமை விமர்சிப்பவர்கள் மக்கள் மத்தியில் நாறிப் போவார்கள்.
மத்தியில் ஆட்சியை காப்பாற்றுவதற்காக எம்.பிக்களுக்கு ரூ.25 கோடி விலை பேசுவதாக இந்திய கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் கூறியிருக்கிறார். அவர் ஒரு மரியாதைக்குரிய தலைவர். எனவே ஆதாரப்பூர்வமாகத்தான் அவர் குற்றச்சாட்டை கூற வேண்டும்.
சமாஜ்வாடியை சேர்ந்த யாராவது அதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாக பரதன் நிரூபித்தால் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்போம்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசை தோற்கடிப்பதற்காக காங்கிரஸ்-சமாஜ்வாடி எம்.பிக்களைத்தான் பேரம் பேசி வருகின்றனர்.
எங்கள் கட்சியை சேர்ந்த ஒரு எம்.பிக்கு ரூ.30 கோடி தருவதாக பகுஜன் சமாஜ் கட்சி கூறியுள்ளது.
மத்திய அரசுக்கு எதிராக வாக்களிக்காவிட்டால், பல்வேறு வழக்குகளை தொடர்ந்து சிறையில் அடைத்து விடுவதாக சமாஜ்வாடி எம்.பிக்களை மாயாவதி மிரட்டுகிறார்.
மத்திய அரசுக்கு ஆதரவு அளிப்பதற்காக, சில முக்கிய அமைச்சர் பதவிகளை சமாஜ்வாடி கட்சிக்கு தர வேண்டும் என்றோ, தற்போது பதவியில் இருக்கும் சில முக்கிய அமைச்சர்களை நீக்க வேண்டும் என்றோ நாங்கள் எந்த நிபந்தனைகளையும் காங்கிரசுக்கு விதிக்கவில்லை. இவையெல்லாம் எங்களுக்கு எதிரான சக்திகள் பரப்பும் தகவல்கள் என்றார்.
ரூ. 30 கோடி தர வந்த மாயாவதி: எம்பி
இதற்கிடையே சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த எம்பியான அக்சய் பிரதாப் சிங் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,
மத்திய அரசுக்கு எதிராக வாக்களிக்க எனக்கு ரூ.30 கோடி தருவதாக பகுஜன் சமாஜ் கட்சியினர் என்னிடம் பேரம் பேசினர் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications