கோவை கூட்டு குடி நீர் திட்டம்-அதிமுக ஆர்ப்பாட்டம்
கோவை: கோவையில் கூட்டு குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தமிழக அரசு தாமதம் செய்வதைக் கண்டித்து நாளை அதிமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:
கோவை புறநகர் பகுதியான குறிச்சி, குனியமுத்தூர், கிணத்துக்கடவு கூட்டு குடிநீர் திட்ட பணிகளை திமுக அரசு தாமதப்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்னர்.
குனியமுத்தூர் குறிச்சி நகராட்சிகளில் சொத்துவரியை அதிகமாக உயர்த்தியுள்ளனர். கிணத்துக்கடவில் இன்னமும்கூட பாதாள சாக்கடைத் திட்டம் முடியவடைந்தபாடில்லை.
எனவே மேற்கண்ட மக்கள் நலத் திட்டங்களை விரைவுபடுத்தி நிறைவேற்றக் கோரியும், இதில் மெத்தனம் காட்டும் தமிழக அரசு, சம்பந்தப்பட்ட நகராட்சிகளைக் கண்டித்தும் கோவை புற நகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆர்பாட்டத்திற்கு அதிமுக தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை தாங்குகிறார். ஆர்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும், என ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஆர்ப்பாட்ட ஏற்பாடுகளில் அதிமுகவினர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.