பஸ்சை வழிமறித்து பெண் காரில் கடத்தல்
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே மினி பஸ்ஸை வழி மறித்த கும்பல் பெண்ணை காரில் கடத்திச் சென்றது.
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ரெட்டிபாளையத்தைச் சேர்ந்த ஏகாம்பரத்தின் மகள் புஷ்பகலா (21). இவர் தனது சித்தி சசிகலாவுடன் கும்மிடிப்பூண்டி கோவிலுக்கு சென்றார்.
இரவு 8 மணியளவில் மினி பஸ்சில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது திரிகுளம் என்ற இடத்தில் காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் பஸ்சை வழி மறித்தது.
பஸ்சுக்குள் ஏறிய அவர்கள் புஷ்பகலாவை வெளியே இழுத்தனர். இதைத் தடுத்த சசிகலாவையும், பிற பயணிகளையும் அக் கும்பல் உருட்டு கட்டைகளால் தாக்கியது.
பின்னர் புஷ்பகலாவை காருக்குள் இழுத்துப் போட்டுக் கொண்டு அகு கும்பல் தப்பியது.
இது குறித்து புஷ்பகலாவின் அண்ணன் மோகன் கவரப்பேட்டை போலீசில் புகார் செய்துள்ளார். அதில், புஷ்பகலாவை அதே ஊரைச் சேர்ந்த குமார் என்பவர் பெண் கேட்டதாகவும் தர மறுத்ததால் காரில் வந்து கடத்தியதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக குமார் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.