அரசு வென்றாலும் இடதுசாரிகளின் போராட்டம் தொடரும்: காரத்

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டது ஏன் என்பதை மக்களிடம் விளக்கும் வகையில் தேசிய அளவிலான பிரசார இயக்கத்தை இடதுசாரிகள் தொடங்கியுள்ளனர்.
நேற்று முன்தினம் டெல்லியில் தொடங்கிய இந்த பிரசார இயக்கத்தின் 2வது கட்டமாக நேற்று மாலை சென்னையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் ராஜா, பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் பிஸ்வாஸ், தமிழகமார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜன் உள்ளிட்ட தலைவர்கள்கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பிரகாஷ் காரத் பேசுகையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வென்றாலும் கூட, அணு சக்தி ஒப்பந்தத்திற்கு எதிரான, அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிரான போராட்டம் தொடரும்.
கடந்த 1993ம் ஆண்டு நடந்த நம்பிக்ைக இல்லாத் தீர்மானத்தின்போது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பிக்களை விலைக்கு வாங்கி வெற்றி பெற்றார் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ். ஆனால் பின்னர் தேர்தல் வந்தபோது காங்கிரஸ் தோல்வி அடைந்தது. அதே கதிதான் தற்போதைய அரசுக்கும் ஏற்படப் போகிறது. எம்.பிக்களை விலைக்கு வாங்குவதற்கு கடுமையான விலையைக் கொடுக்கப் போகிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு.
இடதுசாரிகள், அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்ட பின்னர் சந்தர்ப்பவாத சக்திகள் காங்கிரஸைக் காக்க முன்வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்த்தவர்கள். ஆனால் சுயநலத்தால், சொந்த லாப நஷ்டங்களுக்காகவும் காங்கிரஸைக் காக்க முன்வந்துள்ளனர். ஆனால் இவர்கள் எல்லாம் தேர்தலின்போது தகுந்த பாடம் கற்பிக்கப்படுவார்கள்.
விலைவாசி உயர்வுக்காகவும், பண வீக்கத்திற்காகவும், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதற்காகவும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை மக்கள் தண்டிக்க வேண்டும். நாட்டின் இறையாண்மையை அமெரிக்காவிடம் அடகு வைத்து விட்டது மத்திய அரசு.
நாட்டில் காங்கிரஸ் அதை விட்டால் பாஜகதான் மாற்று என்பது ஒரு தவறான கருத்தாகும். இடதுசாரிகள், அனைத்து அரசியல் சக்திகளையும் இணைத்து, காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக, பலமான புதிய கூட்டணியை உருவாக்கும். இதற்கான முன் முயற்சிகளை இடதுசாரிகள் எடுக்கும்.
காங்கிரஸ் கட்சி மூழ்கும் கப்பல். தேர்தலுக்குள் அது முழுமையாக மூழ்கிப் போய் விடும். எனவே ஐக்கிய முற்போக்குக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள், அதிலிருந்து வெளியேறி விட வேண்டும். இடதுசாரிகளுடன் கைகோர்த்து புதிய அணியை உருவாக்க முன்வர வேண்டும்.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாகவே சர்வதேச அணு சக்தி ஏஜென்சியிடம் செல்ல முடிவெடுத்ததன் மூலம் மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டது காங்கிரஸ்.
அமெரிக்காவுடனான 123 ஒப்பந்தம் ஹைட் சட்டத்தின் கீழ் வருகிறது. அதை ஏற்க முடியாது. அதை முழுமையாக, தீவிரமாக எதிர்ப்போம்.
பாஜக உள்ளிட்ட மதவாத சக்திகளுக்கு உதவுவதற்காக இடதுசாரிகள் ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளதாக காங்கிரஸ் கூறுவது அப்பட்டமான பொய். இடதுசாரிகளை நோக்கி குற்றம் சாட்ட காங்கிரஸுக்கு எந்த அருகதையும் இல்லை.
பாஜகவையும், மதவாத சக்திகளையும் எதிர்த்து காங்கிரஸை விட தீவிரமாக போராடி வரும் கட்சிகள்தான் இடதுசாரிகள். இடதுசாரிகள் ஆளும் மேற்கு வங்கம், கேரளா, திரிபுராவிலிருந்து ஒரு பாஜக எம்.பியோ அல்லது எம்.எல்.ஏவோ இல்லை என்பதே இதற்கு சரியான சான்று.
ஆனால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசோ, மதக் கலவரங்களை கட்டுப்படுத்தத் தவறி விட்டது. கடந்த நான்கரை ஆண்டு கால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், பாஜக தொடர்ந்து சட்டசபைத் தேர்தல்களில் வெற்றி பெற்று வருகிறது. கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடித்து முதன் முறையாக தென்னகத்திலும் கால் பதித்து விட்டார்கள். இதற்கெல்லாம் காங்கிரஸ்தான் காரணம்.
அமெரிக்காவின் மடியில் ஏறி காங்கிரஸ் உட்கார்ந்து கொண்டிருக்கிறது. எனவே அதனால் இனிமேல் பாஜகவையும், மதவாத சக்திகளையும் எதிர்த்துப் போராட முடியாது.
இடதுசாரிகள், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை ஆதரித்து வந்தபோது அரசு மீது ஓரளவுக்கு நம்பகத்தன்மை இருந்தது. ஆனால், குறைந்தபட்ச பொது திட்டத்தை மதிக்கத் தவறியது மற்றும் அமெரிக்காவின் ராணுவத் தோழனாக இந்தியாவை மாற்றியதன் மூலம் அந்த நம்பகத்தன்மையை காங்கிரஸ் இழந்து விட்டது என்றார் பிரகாஷ் காரத்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியச் செயலாளர் டி.ராஜா பேசுகையில், அமெரிக்காவுடன் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளும்தான் 123 ஒப்பந்தத்ைத மேற்கொண்டுள்ளனர். ஆனால் அந்த ஒப்பந்தத்தால் தங்களுக்கு பிரச்சினை வந்தால், சர்வதேச சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் வகையிலான அம்சத்தை அதில் சேர்த்துள்ளனர்.
ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை, அமெரிக்காவின் சட்டமான ஹைட் சட்டத்தின் கீழ் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளனர். இது கிட்டத்தட்ட நமது நாட்டை அமெரிக்காவிடம் ஒப்படைத்து விட்டதாகத்தான் அர்த்தம். இது நாட்டு நலனுக்கு முற்றிலும் விரோதமானது. மக்களுக்கு செய்துள்ள துரோகமாகும்.
அணு சக்தியை இடதுசாரிகள் எதிர்க்கவில்லை. ஆனால் அமெரிக்காவின் ராணுவக் கூட்டாளியாக இந்தியாவை மாற்றுவதையும், அமெரிக்காவிடம் நமது நாட்டை அடகு வைப்பதையும்தான் நாங்கள் எதிர்க்கிறோம் என்றார் ராஜா.












Click it and Unblock the Notifications