சமாஜ்வாடி கூட்டம்-39ல் 16 எம்.பிக்களே வருகை-கட்சி உடைகிறது?
ஜூலை 22ம் தேதி லோக்சபாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்படவுள்ள நிலையில் சமாஜ்வாடி கட்சியின் எம்.பிக்கள் கூட்டம் இன்று டெல்லியில் கூட்டப்பட்டது. இக்கூட்டத்திற்கு கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் தலைமை வகித்தார். அமர்சிங்கும் உடன் இருந்தார்.
இக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் மொத்தம் உள்ள 39 எம்.பிக்களில் வெறும் 16 பேரே வந்திருந்தனர்.
39 பேரில் அதீக் அகமது, அப்சல் அன்சாரி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ராஜ் பாபரும், பேனி பிரசாத் வர்மாவும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். முனவர் உசேன் அதிருப்தி எம்.பி ஆவார். அரசுக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக ஏற்கனவே அவர் டிக்ளேர் செய்து விட்டார். அதேபோலத்தான் ராஜ்நாராயணன் புதோலியா, ஜெய் பிரகாஷ் ஆகியோரும் அறிவித்துள்ளனர்.
கீர்த்தி வர்தன் சிங், மோகன் சிங், ரேவதி ரமன் சிங் ஆகியோர் கடந்த கூட்டத்திற்கு வராமல் இருந்தனர். ஆனால் இப்போதைய கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த நிலையில் வெறும் 16 பேரே வந்துள்ளால் சமாஜ்வாடி கட்சி உடைவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
இந்தச் சூழ்நிலையில், ஜூலை 21 மற்றும் 22 ஆகிய நாட்களில் நடைபெறும் நம்பிக்கை வாக்கு தொடர்பான கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கட்சி எம்.பிக்களுக்கு சமாஜ்வாடி கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.