சோம்நாத் எம்.பியா, சபாநாயகரா? ஜனாதிபதி கேள்வி

லோக்சபாவில் நடக்கப் போகும் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக சோம்நாத் சாட்டர்ஜியின் தலை படு வேகமாக உருட்டப்பட்டு வருகிறது. அரசுக்கு எதிராக அவர் வாக்களிக்க வேண்டும், பதவியிலிருந்து விலக வேண்டும் என இடதுசாரிகள் கோரி வருகின்றன. ஆனால் சோம்நாத் பதவி விலகத் தேவையில்லை என்று காங்கிரஸ் கூறி வருகிறது.
இதுகுறித்து சோம்நாத் சாட்டர்ஜியோ, 22ம்தேதி வரை பொருத்திருங்கள் என்று மர்மமாக கூறி வருகிறார்.
இந்த நிலையில் சோம்நாத் சாட்டர்ஜியின் அந்தஸ்து என்ன என்று லோக்சபா செயலக பொதுச்செயலாளருக்கு குடியரசுத் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் சபாநாயகரா அல்லது சிபிஎம் எம்.பியா என்று பிரதீபா பாட்டீல் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கும் வகையில், இடதுசாரிகள் அஏளித்த கடிதத்தில், சோம்நாத் சாட்டர்ஜியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்தே சோம்நாத்தின் நிலை என்ன என்று லோக்சபா செயலாளரிடம் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டுள்ளார்.
இதையடுத்து சபாநாயகர் அலுவலகமே சோம்நாத் குறித்து விளக்கம் தெரிவித்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு பதில் அனுப்பியுள்ளது. அதில், சோம்நாத் சாட்டர்ஜி இன்னும் சபாநாயகர் பதவியில் நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications