தொலைபேசி ஒட்டுக் கேட்பு லீக்: ஏடிஜிபி உபாத்யாயா திடீர் சஸ்பெண்ட்
சென்னை: தலைமைச் செயலாளர் திரிபாதியின் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டது தொடர்பான டேப் வெளியானது தொடர்பான வழக்கில் திடீர் திருப்பமாக கூடுதல் டிஜிபியும், முன்னாள் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருமான உபாத்யாயா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். துறை ஊழியர் சங்கரை சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
தலைமைச் செயலாளர் திரிபாதிக்கும், உபாத்யாயாவுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் அடங்கிய டேப் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதவிர முன்னாள் சமூக நலத்துறைஅமைச்சர் பூங்கோதைக்கும், உபாத்யாயாவுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பூங்கோதை ராஜினாமா செய்தார்.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்புதான் நீதிபதி சண்முகம் தனது விசாரணையை நிறைவு செய்து இறுதி விசாரணை அறிக்கையை முதல்வரிடம் வழங்கினார்.
இதில், உபாத்யாயா தனக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை பதிவு செய்து சிடியில் வைத்திருப்பது வழக்கம் என்று தெரிய வந்தது. ஆனால் அந்த சிடியில் ஒன்றுதான் வெளியாகி விட்டது. அதற்குக் காரணம், அவரது அலுவலகத்தில் வேலை பார்த்து வரும் சங்கர் என்பவர்தான் காரணம் எனவும் தெரிய வந்தது.
இதையடுத்து பணியில் கவனக்குறைவாக இருந்ததற்காக உபாத்யாயா தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், சங்கரையும் நேற்று சிபிசிஐடி போலீஸார் தங்களது கஸ்டடியில் எடுத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அவர் இன்று கைதுசெய்யப்படக் கூடும் என்றுதெரிகிறது.
இந்த விவகாரம் வெடித்தவுடனேயே உபாத்யாயா பணி மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். தற்போது சஸ்பெண்ட் ஆகியுள்ளார்.