எருமை ரத்தம் குடித்து குழந்தைகள் நேர்த்திக்கடன்!
திருவாடானை: சிவகங்கை மாவட்டம் திருவாடானையில் நடந்த ஆடி திருவிழாவில் எருமை ரத்தத்தைக் குடித்து குழந்தைகள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவாடானையில் உள்ள சமத்துவபுரம் அருகே நரிக் குறவர்கள் காலனி உள்ளது. இங்கு 36 குடும்பங்களை சேர்ந்த நரிக்குறவர்கள் ஊசி, பாசி விற்பனை செய்து வசித்து வருகிறார்கள். இவர்கள் பத்திரகாளியம்மன், மீனாட்சி அம்மன், அய்யனார், பாண்டி உள்ளிட்ட குலதெய்வங்களை வழிபட்டு வருகிறார்கள்.
இதில் அருளாந்து என்பவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் தலைமுறை, தலைமுறையாக பத்திரகாளி அம்மனை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
இவர்கள் ஆண்டுதோறும் ஆடிமாதம் ஆடித் திருவிழா கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்காக காரைக்குடியில் இருந்து பத்திரகாளியம்மன் உருவ வெள்ளி சிலையை செய்து நேற்று முன்தினம் ஊர்வலமாக திருவாடானைக்கு எடுத்து வந்தனர். உடன் நேர்த்திக்கடன் செலுத்த 2 எருமை மாடுகளையும் அலங்கரித்து அழைத்து வந்தனர்.
இதைதொடர்ந்து நேற்று முன் தினம் ஆடி மாத பிறப்பையொட்டி அதிகாலை 4 மணிக்கு பத்திரகாளியம்மனுக்கு 2 எருமை மாடுகளை பலி கொடுத்தனர். அப்போது எருமை மாட்டில் இருந்து பீறிட்டு வெளியேறிய ரத்தத்தால் சாமி சிலைக்கு அபிஷேகம் செய்து அருளாந்து குடும்பத்தை சேர்ந்த முத்தையா, ஆரோக்கியம், இருதயம், பாக்கியராஜ், மைகேல் ஆகியோர் ரத்தத்தை குடித்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்களது குழந்தைகள் குமரேசன், அன்புராசா, கணேஷ், விக்ரம், விஜயன் ஆகியோரும் ரத்தம் குடித்தனர்.
இதுகுறித்து அருளாந்து கூறியதாவது:
பத்திரகாளி அம்மன் உருவ வெள்ளி சாமி சிலைதான் எங்களின் குடும்பச் சொத்து. 24 தலைமுறையாக ஆண்டுதோறும் ஆடி மாத பூஜை வழிபாடு நடத்துகிறோம். அப்போது குடும்ப நன்மைக்காகவும், உடல் ஆரோக்கியத்துக்காகவும் எருமை மாடுகளை பலிகொடுத்து ரத்தம் குடிப்போம்.
சாமி பக்தி உள்ளதால் ரத்தம் செரிமாணம் ஆகிவிடும். இதன் கறியை பத்ரகாளியம்மன் சாமி கும்பிடுபவர்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். திருவிழாவின் மறுநாள் மது எடுப்பு நடக்கும். இதில் மாட்டின் தலை, கொம்பை ஊர்வலமாக எடுத்து சென்று ஒரு புதரில் வைத்து சாமி கும்பிட்டு திருவிழாவை நிறைவு செய்வோம் என்றார்.